ஆசியானுக்கும் சீனாவுக்கும் இடையில் பொருளியல் ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்தும் வகையில் அந்த இரண்டு தரப்புகளுக்கும் இடைப்பட்ட அரசியல் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட வேண்டிய தேவை இருக்கிறது என்று பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்தார்.
தென்சீனக் கடலில் நடத்தை நியதி தொடர்பான பேச்சுவார்த்தைகள் பல ஆண்டுகளாகத் தேங்கிக் கிடக்கின்றன.
இதை எடுத்துக்காட்டாகக் குறிப்பிட்ட பிரதமர், அதன் தொடர்பில் மேலும் முன்னேற்றம் ஏற்படும் என்று சிங்கப்பூர் நம்புவதாகத் தெரிவித்தார்.
சீன மத்திய தொலைக்காட்சி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் பிரதமர் இவ்வாறு கூறினார். அந்தப் பேட்டி வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது.
திரு லீ, அந்த ஒரு மணி நேரப் பேட்டியில் சிங்கப்பூர்-சீனா உறவு, சிங்கப்பூரின் வெளியுறவுக் கொள்கை, உலக அரங்கில் சீனாவின் எழுச்சி ஆகியவை பற்றி கருத்து தெரிவித்தார்.
சீனா-ஆசியான் தாராள வர்த்தக வட்டார ஏற்பாட்டை மேம்படுத்துவதில் சிங்கப்பூர் ஆற்றக்கூடிய பங்கு பற்றி கருத்துரைத்த பிரதமர், அதில் சிங்கப்பூர் முழுமையாக ஈடுபடும் என்றும் அந்த ஏற்பாட்டை மேம்படுத்த உதவ முயலும் என்றும் கூறினார்.
இதனிடையே, கணிதம் படித்த தான், கணித வல்லுநராக ஆகாமல் அரசியலைத் தேர்ந்து எடுத்துக்கொண்டது குறித்து தமக்கு வருத்தம் கிடையாது என்றும் திரு லீ பேட்டியில் குறிப்பிட்டார்.
பிரதமர், பிரிட்டனில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் இளநிலை பட்டப்படிப்பு பயின்றபோது கணிதம் படித்தார்.
சிங்கப்பூரர்கள் தம்மை நம்பும்படி செய்வது என்பது முடிவில்லாத ஒரு பணி என்றும் அவர் தெரிவித்தார்.
"இளநிலை பட்டப்படிப்பு படித்தபோது இரண்டு ஆண்டுகள் கணிதம் பயின்றேன். சிங்கப்பூருக்குத் திரும்பி, சிங்கப்பூரின் ஓர் அங்கமாகி, நாடு வெற்றி அடைய என்னால் முடிந்ததைச் செய்யவேண்டிய பொறுப்பு எனக்கு இருந்தது," என்றும் அவர் கூறினார்.
அரசியல் வாழ்க்கை மிகவும் மனநிறைவான வாழ்க்கையாக இருந்து வந்துள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.

