கொவிட்-19 சூழலில் ஒத்திவைக்கப்பட்ட அவசரமற்ற அறுவை சிகிச்சைகள் குறித்து சுகாதார அமைச்சு
அவசரமற்ற அறுவை சிகிச்சைகள் கொவிட்-19 நோய்ச் சூழலில் ஒத்திவைக்கப்பட்டன. கிருமிப் பரவல் நிலவரம் சிங்கப்பூரில் மேம்பட்டு வருவதை அடுத்து அவை மீண்டும் கடந்த ஆண்டு தொடங்கிவிட்டதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
துணைக் கிருமித் திரிபுகள் காரணமாக அதிகமானோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது விருப்ப அறுவை சிகிச்சைகள் மேற்கொள்வதை மருத்துவமனைகள் ஒத்திவைக்கும் என்று சுகாதார அமைச்சர் ஓங் யி காங் கடந்த ஆண்டு ஜூலை மாதம் தெரிவித்தார்.
இத்தகைய அறுவை சிகிச்சைகளை மருத்துவமனைகள் 2020ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் ஒத்திவைக்கத் தொடங்கின.
பின்னர், ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரையிலான கிருமி முறியடிப்புக் காலகட்டத்துக்குப் பிறகு மீண்டும் இக்குறிப்பிட்ட அறுவை சிகிச்சைகள் படிப்படியாகத் தொடங்கின.
அதையடுத்து, மருத்துவமனைகளும் நிபுணத்துவ வெளிநோயாளி மருந்தகங்களும் அவசரமல்லாத அறுவை சிகிச்சைகளையும் மருத்துவச் சந்திப்புகளையும் மீண்டும் ஒத்திவைக்கும்படி 2021ஆம் ஆண்டு மே மாதத்தில் சுகாதார அமைச்சு கேட்டுக்கொண்டது.
இருப்பினும், அவ்வேளையில் மருத்துவ உதவி அவசியமாகத் தேவைப்பட்டோருக்குத் தொடர்ந்து தக்க கவனிப்பு வழங்கப்பட்டது.
கொள்ளைநோய்ச் சூழலில் சிங்கப்பூரின் மருத்துவமனைகளில் படுக்கைகளுக்குத் தட்டுப்பாடு நிலவியது.
சில மருத்துவமனைகளில் நோயாளிகள் 20 மணிநேரம்கூட காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.
இத்தகைய சூழல் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வரைநீடித்தது.
பெரும்பாலான பொது மருத்துவமனைகளும் தேசிய நிபுணத்துவ மருத்துவ நிலையங்களும் அவசரமற்ற அறுவை சிகிச்சைகளில் 3 முதல் 5 விழுக்காட்டினை 2021ல் தள்ளிவைத்ததாக சுகாதார அமைச்சு ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தது.
‘சிங்ஹெல்த்’, ‘தேசிய சுகாதாரப் பராமரிப்புக் குழுமம்’ (என்எச்ஜி), ‘தேசிய பல்கலைக்கழக சுகாதார அமைப்புமுறை’ (என்யுஎச்எஸ்) ஆகிய சிங்கப்பூரின் மூன்று சுகாதாரப் பராமரிப்புக் குழுமங்களும் முன்னர் ஒத்திவைத்த விருப்ப அறுவை சிகிச்சைகளை மீண்டும் தொடங்கிவிட்டதாகத் தெரிவித்துள்ளன.
இருப்பினும் இத்தகைய சிகிச்சைகளின் எண்ணிக்கை குறித்துத் தகவல் வெளியிடப்படவில்லை.
இருப்பினும் கொவிட்-19 காலகட்டத்தில் ஒத்திவைத்த விருப்ப அறுவை சிகிச்சைகளில் பெரும்பாலானவற்றை குழுமம் மேற்கொண்டுள்ளதாக என்எச்ஜி மருத்துவக் கழகக் குழுமத்தின் தலைவர் லிம் டோக் ஹான் தெரிவித்தார்.
அறுவை சிகிச்சைக்குப் பிறகு அதே நாளில் வீடு திரும்பக்கூடிய நோயாளிகள், குறுகியகால படுக்கைப்பிரிவுக் கட்டில்கள் ஆகிய இரண்டு பிரிவுகளிலும் குழுமம் அதன் ஆற்றலை அதிகமாக்கியதாக அவர் விளக்கினார்.
கொள்ளைநோயின்போது தொடங்கிய சில முயற்சிகளைச் சில மருத்துவமனைகள் தொடர்ந்து மேற்கொள்கின்றன.
மீண்டும் ஒரு கிருமிப் பரவல் அல்லது ஒரு கொள்ளைநோய் வரலாம் என்ற சாத்தியத்தால் என்யுஎச்எஸ் குழுமம் அதன் தொலைத்தொடர்பு மருத்துவ ஆலோசனைச் சந்திப்புகளையும் வீடுகளிலேயே குணமடையும் திட்டத்தையும் தொடர்கிறது.
அவசரமல்லாத அறுவை சிகிச்சைகளுக்காக ஒருசில மருத்துவமனைகள் குறைந்த அளவு ஊடுருவல் முறையிலான அறுவை சிகிச்சையையும் அதிகம் கையாளத் தொடங்கியுள்ளன. இதனால் நோயாளிகள் மருத்துவமனையில் ஒரு நாளுக்கு மேல் தங்கும் தேவை இருக்காது என்று கூறப்பட்டது.