பாலியல் தொடர்பான தொழிலில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் 37 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 35 பேர் பெண்கள், இருவர் ஆண்கள். கைதானவர்கள் 21 வயதுக்கும் 42 வயதுக்கும் இடைப்பட்டவர்கள். அவர்களிடம் காவல்துறை அதிகாரிகள் விசாரணை நடத்துகின்றனர்.
கைது செய்யப்பட்ட இரண்டு ஆண்களும் பெண்களை வைத்துப் பாலியல் தொழில் நடத்தியதாகச் சந்தேகிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்ட பெண்கள், பாலியல் சேவை வழங்குவதாக இணையத்தில் விளம்பரம் செய்திருந்ததாக காவல்துறை கூறியது. சிங்கப்பூரெங்கும் பல்வேறு இடங்களில் இம்மாதம் நடத்தப்பட்ட அதிரடிச் சோதனையில் இவர்கள் பிடிபட்டனர். பாலஸ்டியர் சாலை, ஊட்ரம் சாலை, அப்பர் பாய லேபார் வட்டாரம், சிலிகி சாலை ஆகிய இடங்களில் உள்ள உடற்பிடிப்பு நிலையங்களில் சந்தேக நபர்கள் சுற்றிவளைக்கப்பட்டனர். இந்த அதிரடி நடவடிக்கை இம்மாதம் 1ஆம் தேதி தொடங்கி 23ஆம் தேதியன்று நிறைவடைந்தது. இதைக் குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகளும் தங்ளின் காவல்துறைப் பிரிவு அதிகாரிகளும் இணைந்து நடத்தினர். பெண்களை வைத்து இணையம் மூலம் பாலியல் தொழில் நடத்தும் குற்றம் நிரூபிக்கப்பட்டால் $100,000 வரை அபராதமும் ஐந்து ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் விதிக்கப்படலாம்.

