குழந்தை பராமரிப்பாளரின் பராமரிப்பின்கீழ் இருந்தபோது ஆறு மாதக் குழந்தை ஒன்று குப்புறப் படுத்த நிலையில் சுயநினைவின்றி கிடந்தது. அக்குழந்தை இறந்துவிட்டதாக பிறகு உறுதி செய்யப்பட்டது.
குழந்தையின் மரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டது.
இந்நிலையில். யோங் ஜிங் யு எனும் அக்குழந்தையின் மரணத்துக்கு மூன்று சாத்தியக்கூறுகள் உள்ளதாக மரண விசாரணை அதிகாரி முன் நேற்று சாட்சியம் அளித்த சுகாதார அறிவியல் ஆணையத்தைச் சேர்ந்த தடயவியல் நிபுணர் டாக்டர் ஆட்ரி இயோ கூறினார்.
2021ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 28ஆம் தேதியன்று குழந்தைக்குப் பாலூட்டிய பிறகு பிற்பகல் 3 மணி அளவில் தொட்டிலில் அதை அந்தப் பராமரிப்
பாளர் தூங்கவைத்ததாக விசாரணை அதிகாரி ரசல் டோங் நேற்று தெரிவித்தார்.
மாலை 6.20 மணி அளவில் அக்குழந்தை குப்புறப் படுத்த நிலையில் இருந்ததாகவும் அதன் முகம் நீல நிறத்தில் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. உடனே அந்தக் குழந்தைப் பராமரிப்பாளர் ஆம்புலன்சை அழைத்தார்.
குழந்தை செங்காங் பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது.
ஆனால் சிகிச்சை பலனின்றி அது இறந்தது.
இதற்கிடையே, குழந்தையின் மரணத்துக்கான காரணத்தை உறுதியாகச் சொல்ல முடியவில்லை என்றார் டாக்டர் இயோ.
மூச்சுத்திணறல் ஒரு காரணமாக இருக்கலாம் என்றார் அவர். குப்புறக் கிடந்ததில் மூச்சுவிட முடியாத நிலை ஏற்பட்டிருக்கும் என்று அவர் கூறினார்.
குழந்தையின் நுரையீரலில் கடுமையான அழற்சி ஏற்பட்டிருந்தது பிரேதப் பரிசோதனையில் தெரியவந்ததாகவும் டாக்டர் இயோ கூறினார்.
ஆனால் அந்த அழற்சி நிமோனியாவை ஏற்படுத்தும் அளவுக்கு மோசமானது அல்ல என்றார் அவர்.
இதையடுத்து, மூன்றாவது சாத்தியக்கூறையும் அவர் முன்வைத்தார்.
இதயத்துக்குச் செல்லும் அயனிகளைப் பாதிக்கும் மரபணு உருமாற்றத்தாலும் குழந்தை பாதிக்கப்பட்டிருந்ததாக டாக்டர் இயோ தெரிவித்தார்.
இதுவும் குழந்தையின் மரணத்துக்குக் காரணமாக இருந்திருக்கக்கூடும் என்றார் அவர்.

