நான்கு மாதங்களுக்குப் பிறகு கைமாறிய வீடுகள் அதிகம், விலையும் கூடியது
சிங்கப்பூரில் கூட்டுரிமை அடுக்குமாடி வீடுகள் மறுவிற்பனைச் சந்தை, சீனப் புத்தாண்டு காலம் காரணமாக ஜனவரியில் மந்தமாக இருந்தது. ஆனால் பிப்ரவரியில் அது சூடுபிடித்தது.
அதிகமான வீடுகள் கைமாறின. விலையும் 1.4% அதிகரித்தது. ஜனவரியில் இத்தகைய 503 வீடுகள் விற்கப்பட்டன. பிப்ரவரியில் 756 வீடுகள் கைமாறியதாக கணக்கிடப்படுகிறது.
இது 50.3% அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
99.co, எஸ்ஆர்எக்ஸ் ஆகிய நிலச்சொத்து இணையவாசல்கள் மூலம் இந்த நிலவரங்கள் தெரியவருகின்றன.
சொத்துச் சந்தையில் தேவையை மட்டுப்படுத்தவும் விவேகமான முறையில் மக்கள் கடன் வாங்கவும் ஊக்கமூட்டுவதற்காக சென்ற ஆண்டு செப்டம்பரில் புதிதாக சில நிபந்தனைகள் நடப்புக்கு வந்தன.
அதை அடுத்து சென்ற ஆண்டு அக்டோபரில் தொடங்கி தொடர்ந்து நான்கு மாதங்களில் கைமாறிய வீடுகள் குறைந்து வந்தன. பிப்ரவரியில்தான் சந்தை சூடுபிடித்தது.
ஆண்டு இறுதி விடுமுறை, சீனப் புத்தாண்டு காலங்களில் சந்தை பொதுவாகவே ஊக்கம் குறைந்தே இருக்கும்.
பிப்ரவரியில் சந்தை ஏறுமுகமாகத் திரும்பியதற்கு அதுவே காரணமாக இருக்கலாம் என்று சொத்துத் துறை பகுப்பாய்வாளர்கள் கூறுகிறார்கள்.
அதேவேளையில், பிப்ரவரியில் விற்பனை அதிகரித்து உள்ளது என்பதை வைத்து, இந்தச் சந்தை மீட்சி கண்டுவிட்டது என்ற முடிவுக்கு வந்துவிட முடியாது என்று சிலர் கூறுகிறார்கள்.
கூட்டுரிமை வீடுகளின் மறுவிற்பனை விலை பிப்ரவரியில் 1.4% கூடியது. விலை ஜனவரியில் கொஞ்சம் குறைந்திருந்தது.
ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் கூட்டுரிமை வீடுகளின் ஒட்டுமொத்த மறுவிற்பனை விலை சென்ற மாதம் 9.2% அதிகரித்துள்ளது.
ஆர்ச்சர்ட்/ஹாலந்து பகுதியில் இருக்கும் குத்தகைக் கால கட்டுப்பாடு இல்லாத 'நிசாம் பார்க் ரெசிடண்ட்ஸ்'ல் உள்ள ஒரு கூட்டுரிமை அடுக்குமாடி வீடு பிப்ரவரியில் $20.5 மில்லியன் விலைக்கு வாங்கப்பட்டது.
இதுவே பிப்ரவரியில் கைமாறிய கூட்டுரிமை மறுவிற்பனை வீடுகளில் ஆக அதிக விலை உள்ள வீடாகும்.
நகர விளிம்புப் பகுதி வீடுகளைப் பார்க்கையில், ஹார்பர்ஃபிரண்ட் வட்டாரத்தில் உள்ள கெப்பல் பேயில் கட்டப்பட்டுள்ள 'ரிஃபிளெக்ஷன்ஸ்' புளோக்கில் இருக்கும் 99 ஆண்டு குத்தகைக்கால வீடுதான் ஆகஅதிக விலைக்கு கைமாறிய வீடாகும்.
அது $8,194,000 விலைக்கு வாங்கப்பட்டது.

