அமெரிக்காவின் ஃபுளோரிடா அருகே கடலில் பரவத் தொடங்கிய கடற்பாசி அந்த மாநிலத்தின் கடற்கரையை ஓரளவு எட்டிவிட்டது. அவற்றை அகற்றவில்லை என்றால் கடற்கரையில் அந்தப் பாசி அழுகிவிடும். அப்படி அழுகும்போது 'ஹைட்ரஜன் சல்பைடு' என்ற வாயு வெளியாகும்.
அந்த வாயு அழுகிய முட்டை வாடை அடிக்கும். அதனால் நிலத்தடி நீர் நச்சுத்தன்மை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு.
இத்தகைய ஒரு பாதிப்பு சிங்கப்பூருக்கு இருக்கிறதா என்பது பற்றி இந்தத் துறையைச் சேர்ந்த வல்லுநர்கள் கருத்து கூறினர்.
சிங்கப்பூர் அருகே கடலில் கடற்பாசிகள் மிதப்பதைக் கண்டால் சிங்கப்பூரர்கள் அது பற்றி கவலைப்பட வேண்டுமா, வேண்டாமா என்பது பற்றியும் அவர்கள் தகவல்களைத் தெரிவித்தனர்.
கடற்பாசிகள் என்பவை வெப்ப மண்டல, துணை வெப்ப மண்டல கடற்பகுதிகளில் உலகம் முழுவதும் பரவிக் காணப்படும் ஒரு தாவர இனம்.
அவற்றுக்கு வேர் கிடையாது. காற்றடிக்கும் திசையில் படை படையாக மிதந்து, நகர்ந்து செல்லக்கூடியவை.
அவை பெரிய அளவில் ஒன்று திரண்டு நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தொலைவுக்குக் கடலில் கடந்து செல்லக்கூடியவை.
சிங்கப்பூரைப் பொறுத்தவரைதேங்கிக் கிடக்கும் நீர்நிலைகளில் அந்தப் பாசிகள் காணப்படும் என்று தேசிய பூங்காக் கழகத்தின் தேசிய பன்மய உயிரியல் நிலையத்தின் கடலோர, ஆழ்கடல் பிரிவு இயக்குநர் டாக்டர் கரின் துன் கூறினார்.
சிங்கப்பூரில் பொதுவாகக் காணப்படும் கடல்வாழ் தாவர இனம் பாசி என்றாலும் ஃபுளோரிடா அருகே இப்போது காணப்படும் அளவுக்கு இங்கு அவை பரவுவதில்லை.
பருவநிலை மாற்றம் காரணமாக அதிக மழை பெய்தால் சமாளிக்க முடியாத அளவுக்கு கடற்பாசியும் இதர நுண்ணுயிரிகளும் மண்டிவிடக்கூடிய வாய்ப்பு உண்டு என்று நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் ஆசிய சுற்றுப்புற பள்ளியைச் சேர்ந்த இணைப் பேராசிரியர் ஏட்ரியானா லோபஸ் தாஸ் சான்டோஸ் கூறினார்.
தேசிய பூங்காக் கழகம் கடற்பாசிகள் காணப்படக்கூடிய இடங்களைக் கண்காணித்து வருகிறது.
கடற்பாசிகள் அதிகம் மண்டி வளரக்கூடிய கோனி தீவில் பெரிய அளவிற்கு அவை காணப்படவில்லை.
சிங்கப்பூரில் கடற்பாசிகள் பெரிய அளவுக்கு மண்டும் என்பதற்கான வாய்ப்பு தெரியவில்லை.
என்றாலும்கூட இதர வகை தாவரங்கள் இந்த வட்டார கடற்பகுதியில் பெருகி இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது என்று நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் உள்ள சிங்கப்பூர் சுற்றுப்புற உயிர் அறிவியல் பொறியியல் நிலையத்தைச் சேர்ந்த பேராசிரியர் ரெபெகா கேஸ் கூறினார்.

