அனைத்துலக அளவிலான எந்திரனியல் போட்டியை சிங்கப்பூர், வரும் அக்டோபர் மாதத்தில் ஏற்று நடத்த இருக்கிறது.
ஏழாவது முறையாக நடைபெறும் இப்போட்டியை ஆசிய நாடு ஒன்று ஏற்று நடத்துவது இதுவே முதல்முறை.
இந்தப் போட்டியில் ஏறக்குறைய 190 நாடுகள் கலந்துகொள்கின்றன.
'ஒலிம்பிக்' பாணியிலான இப்போட்டியை அமெரிக்காவைச் சேர்ந்த லாபநோக்கமற்ற அமைப்பான 'ஃபர்ஸ்ட் குளோபல்' நிறுவனம் ஆண்டுக்கு ஒருமுறை நடத்துகிறது.
'ஸ்டெம்' எனப்படும் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் ஆகிய துறைகளை மேம்படுத்துவது இதன் இலக்கு.
புத்தாக்கம், நீடித்த நிலைத்தன்மை ஆகிய அம்சங்களில் சிங்கப்பூர் கவனம் செலுத்துவதைச் சுட்டிய 'ஃபர்ஸ்ட் குளோபல்' நிறுவனம், இவ்வாண்டுப் போட்டியின் கருப்பொருளுடன் இது ஒத்துப்போவதாகக் குறிப்பிட்டது.
இந்தப் போட்டி நடைபெறும் நேரமும் சிங்கப்பூர் தேசிய அளவிலான ஹைட்ரஜன் வாயு உத்தியைத் தொடங்கும் நேரமும் ஒன்றாக இருப்பதை அமெரிக்காவுக்கான சிங்கப்பூர்த் தூதர் அஷோக் மிர்புரி சுட்டினார்.
போட்டியில் சிங்கப்பூர் சார்பாக ஆங்கிலோ சீனத் தன்னாட்சிப் பள்ளி மாணவர் குழு கலந்துகொள்ளும்.
2017ஆம் ஆண்டு இப்போட்டி தொடங்கியது முதல் இப்பள்ளியின் மாணவர் குழு இதில் கலந்துகொண்டுவருகிறது.
போட்டியாளர்கள் 14 முதல் 18 வயது நிரம்பியவர்களாக இருத்தல் வேண்டும்.
ஒரு குழுவில் மூன்று முதல் ஐந்து பேர் வரை இடம்பெற்றிருப்பர்.
பாவனை உலகில் தங்கள் இயந்திர மனிதக் கருவி மூலம் ஹைட்ரஜன் வாயுவின் தயாரிப்பு, சேமிப்பு, அதை ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குக் கொண்டு செல்லுதல், எரிசக்தியாக மாற்றுதல் ஆகிய நடவடிக்கைகளை மாணவர் குழு மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாண்டு அக்டோபர் மாதம் 7ஆம் தேதியில் இருந்து 10ஆம் தேதி வரை நடைபெறும் போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்குப் பதக்கங்கள் வழங்கப்படும்.
இதற்குமுன் இப்போட்டியை துபாய், ஜெனிவா, மெக்சிகோ சிட்டி, வாஷிங்டன் ஆகிய நகரங்கள் ஏற்று நடத்தின.
கொவிட்-19 காலகட்டத்தில் மெய்நிகர் முறையில் போட்டி நடைபெற்றது.
சிங்கப்பூர், அமெரிக்க அரசாங்கங்கள் இம்முறை போட்டிக்கு ஆதரவு வழங்குகின்றன.

