அதிகரிக்கும் பணவீக்கம், பொருளியல் மந்தநிலை, உயரும் சுகாதாரப் பராமரிப்புக் கட்டணங்கள் ஆகியவை தங்கள் நிதி இலக்குகளை எட்டுவதைத் தடை செய்யும் மூன்று முக்கிய அம்சங்கள் என்று சிங்கப்பூர்வாசிகள் கூறிஉள்ளனர்.
'மனுலைஃப் ஆசியா கேர் கருத்தாய்வு 2023' எனும் அண்மைய ஆய்வில் 1,037 சிங்கப்பூர்வாசிகள் பங்குபெற்றனர்.
நேற்று வெளியிடப்பட்ட ஆய்வு முடிவில், பணவீக்கம் தங்களை அச்சுறுத்துவதாக 68 விழுக்காட்டினர் கூறினர். இது இந்த வட்டாரவாசிகளின் விகிதத்தைக் காட்டிலும் அதிகம் எனக் கூறப்பட்டது.
பொருளியல் மந்தநிலையை 60 விழுக்காட்டினர் குறிப்பிட்டனர். கிட்டத்தட்ட 53 விழுக்காட்டினர் மருத்துவக் கட்டண உயர்வு மிரட்டலாக விளங்குவதாகக் கூறினர்.
ஆய்வில் கலந்துகொண்டோரில் 50 விழுக்காட்டுக்கு மேற்பட்டோர் நெருக்கடி நேரச் சேமிப்பு குறித்து உறுதி தெரிவித்தனர்.
தற்போதைய வாழ்க்கைமுறையைத் தொடரவும் அவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.
ஆசியாவின் ஏழு இடங்களில் 25 வயது முதல் 60 வயது வரையிலானோரிடம் இந்தக் கருத்தாய்வு நடத்தப்பட்டது.
சென்ற ஆண்டு டிசம்பர் மாதம் முதல் இவ்வாண்டு ஜனவரி மாதம் வரை ஆய்வு இடம்பெற்றது.
சிங்கப்பூரில் இந்த ஆய்வில் பங்குகொண்டோரில் 43 விழுக்காட்டினர் மட்டுமே தங்கள் ஓய்வுக்காலத்திற்குத் தேவையான தொகையை முழுமையாக சேமிக்க இயலும் என்று கூறிஉள்ளனர்.
சிங்கப்பூர்வாசிகள் அதிகம் முன்னுரிமை தரும் தனிப்பட்ட நிதி இலக்கு என்பது கூடுமானவரை முன்கூட்டியே பணியில் இருந்து ஓய்வு பெறுவது என்று ஆய்வு குறிப்பிட்டது.
ஆனால் அதற்குத் தாங்கள் இன்னும் திட்டமிடவில்லை என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.
ஆய்வில் கலந்துகொண்ட ஏறக்குறைய 63 விழுக்காட்டு சிங்கப்பூர்வாசிகள் ஓய்வுக்காலத்திற்கு சேமிப்பதற்கு முக்கிய முன்னுரிமை தருவதாகத் தெரிவித்தனர். ஒப்புநோக்க, இந்த வட்டாரத்தில் இவ்வாறு கருத்துரைத்தவர்களின் சராசரி விகிதம் 49 விழுக்காடு.
சிங்கப்பூர்வாசிகளில் பெரும்பாலோர் 62 வயதில் ஓய்வுபெற விரும்புவதாகக் குறிப்பிட்டனர்.
25 வயது முதல் 35 வயது வரையிலானோரில் 25 விழுக்காட்டினர் மட்டுமே ஓய்வுக்கால சேமிப்பு குறித்துத் திட்டமிடுவதாகக் கூறியுள்ளனர்.
45 வயதுக்கு மேற்பட்டோரிடம் இந்த விகிதம் 44 விழுக்காடாகப் பதிவானது.

