சிங்கப்பூர், மலேசிய காவல்துறைகளின் ஒத்துழைப்பால், ஜோகூரில் செயல்பட்ட மோசடிக் கும்பல் ஒன்று முறியடிக்கப்பட்டுள்ளது. அது சிங்கப்பூரர்களை இலக்காகக் கொண்டு செயல்பட்டது. இதன் தொடர்பில் 18லிருந்து 27 வயது வரையிலான மூன்று மலேசிய ஆடவர்கள் கைது செய்யப்பட்டு நேற்று முன்தினம் ஜோகூரிலிருந்து சிங்கப்பூருக்குக் கொண்டு வரப்பட்டனர்.
ஜோகூரிலுள்ள ஒரு வீட்டில் இருந்து செயல்பட்ட அவர்களை அரச மலேசியக் காவல்துறை இம்மாதம் 20ஆம் தேதி கைது செய்தது.
இந்த போலி நண்பர் மோசடியில், ஏமாற்றுக்காரர் நண்பர் போல நடித்து அவர்களிடம் நிதியுதவி கேட்பார். இவ்வாண்டு தொடக்கத்தில் ஆரம்பித்த இக்கும்பல் தொடர்பில் 40க்கு மேற்பட்ட புகார்கள் சிங்கப்பூர் காவல்துறையிடம் செய்யப்பட்டன. இதில் பாதிக்கப்பட்டவர்கள் $250,000 மேற்பட்ட பணத்தை இழந்துள்ளனர்.
அந்த மூன்று ஆடவர் மீது இன்று ஏமாற்றுவதற்கு சதித்திட்டம் தீட்டிய குற்றம் சுமத்தப்படும். குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்கள் ஒவ்வொருவருக்கும் மூன்று ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.

