இவ்வாண்டில் இதுவரை குறைந்தது 1,013 பேர் வேலை தொடர்பான மோசடிகளில் சிக்கி, $17.6 மில்லியன் பணத்தை இழந்தனர்.
வேலை தேடி வருவதாகச் சொல்லி ஏமாற்றப்படும் அவர்கள் முதலில் எளிதான கேள்விகளுக்குப் பதில் அளிக்க சொல்லப்படுவார்கள். பின்னர் அவர்களுக்கு போலியான வேலைகள் மோசடிக்காரர்களால் வழங்கப்படும்.
இதுபோன்ற வேலை தொடர்பான மோசடிகளில் சிக்க வேண்டாம் என்று எச்சரித்த காவல்துறை, முதலில் வாட்ஸ்அப் அல்லது டெலிகிராம் தளங்கள் மூலம் எளிதான கேள்வி பதில் அங்கத்திலோ அல்லது சந்தை ஆய்வில் பங்கேற்கவோ பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுவார்கள் என்று கூறியது.
கேள்விகள், பொதுவாக உணவு விநியோகத் தளங்கள், சுற்றுலாத்துறை அல்லது நிகழ்ச்சிகள், விழாக்கள் பற்றியதாக இருக்கும். இந்த மோசடியில் சிக்கியவர்களுக்கு ஒரு சிறிய ஊக்கத்தொகை அளிக்கப்படும்.
"தங்களுக்கு இந்த வழியில் பணம் கிடைக்கிறது என்று நம்பும் மக்கள், மேலும் கவர்ச்சியான வேலைகள் கிடைக்க பின்னர் மற்றொரு வாட்ஸ்அப் அல்லது டெலிகிராம் தளங்களின் இணைப்புகள் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்," என்று காவல்துறை கூறியது.
மோசடிக்காரர்கள் பின்னர் மின்னிலக்க நாணயங்களின் மதிப்பைக் கூட்ட அல்லது கைப் பேசிச் செயலிகளின் தரநிலையை மதிப்பிட மோசடியில் சிக்கியவர்களைக் கேட்டுக்கொள்வார்கள்.
இந்த மோசடித் தளங்களில் பணிகளை மேற்கொள்ள பாதிக்கப்பட்டோர் வங்கிக் கணக்குகளைத் திறந்து அவற்றின் மூலம் மோசடிக்காரர்கள் வழங்கும் வங்கிக் கணக்குகளில் பணத்தை மாற்றிவிடச் சொல்வார்கள்.
"பணத்தை மாற்றிவிட்ட பிறகு தங்களுக்குக் கிடைக்க வேண்டிய ஊக்கத்தொகை கிடைக்காமல் போகும்போதோ அல்லது மோசடிக்காரர்களைத் தொடர்புகொள்ள முடியாமல் போகும்போதுதான் தாங்கள் ஏமாற்றப்பட்டு விட்டதாக பாதிக்கப்பட்டோர் உணர்வார்கள்," என்றும் காவல்துறை விவரித்தது.
கடந்த திங்கட்கிழமை ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் வெளியிட்ட செய்தியில், இதுபோன்ற ஒரு மோசடி பற்றி தெரிவிக்கப்பட்டது.
சொத்து முகவர்கள் என்று கூறிக்கொண்ட மோசடிக்காரர்கள், ஃபேஸ்புக், கரோசெல் போன்ற தளங்களில் வீட்டு வாடகை தொடர்பான போலியான பதிவுகளை பதிவேற்றம் செய்யும்படி சமூக ஊடகப் பயனாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுவார்கள்.
அவ்வாறு தங்களின் உண்மையான சமூக ஊடகப் பக்கங்களில் போலியான பதிவேற்றங்கள் போடும் பயனாளர்கள் ஒவ் வொருவருக்கும் மோசடி நபர் $50 கொடுத்தார்.
உதாரணத்துக்கு, 22 வயது மாணவர் ஒருவர், கரோசெல் தளத்தில் மின்னிலக்க விற்பனை நிர்வாகி பற்றிய வேலை விளம்பரத்தைப் பார்த்து, அதற்காக விண்ணப்பித்து இந்த வலையில் சிக்கிக்கொண்டார்.
'ஸ்கேம்ஷீல்டு' எனும் செயலியை தங்கள் திறன்பேசியில் மக்கள் பதிவிறக்கம் செய்துகொள்ளும்படி காவல்துறை ஊக்குவிக்குகிறது.
மேலும் தங்கள் வங்கிக் கணக்கு, சமூக ஊடகம், சிங்பாஸ் கணக்குகளுக்கு இரண்டு கட்ட பாதுகாப்பு அம்சத்தைச் சேர்த்துக்கொள்ளும்படியும் ஊக்குவிக்கப்படுகிறது.
பேநவ் போன்ற இணைய வங்கி பரிவர்த்தனைகளுக்கு வரம்பையும் அமைத்துக்கொள்ள வேண்டும்.
மோசடி தொடர்பான அறிகுறிகள் பற்றி அறிந்துகொள்ள பொதுமக்கள் www.scamalert.sg எனும் இணையத்தளம் அல்லது 1800-722-6688 எனும் மோசடிக்கு எதிரான நேரடித் தொலைபேசி எண்ணை அணுகலாம்.
"மிகக் குறைந்த முயற்சியில் கவர்ச்சியான சம்பளம் வழங்கும் வேலைகளை நம்பி ஏமாற வேண்டாம்," என்றும் காவல்துறை அறிவுறுத்துகிறது.
இப்படிப்பட்ட குற்றங்கள் பற்றி தகவல் அளிக்க விரும்புவோர் 1800-255-0000 எனும் காவல்துறையின் எண்ணிலோ அல்லது www.police.gov.sg/iwitness எனும் இணையத்தளம் மூலமாகவோ தெரிவிக்கலாம்.

