நீரிழிவு நோயால் கண்ணில் ஏற்படும் விழி வெண்படல நரம்பியல் பிரச்சினைக்கு, ரத்தக் கொழுப்பைக் குறைக்க பயன்படுத்தும் மருந்தான ஃபெனோஃபைபிரேட்டைப் பயன்படுத்தினால் அப்பிரச்சினை தீரக்கூடும் என்று சிங்கப்பூர் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
விழி வெண்படல நரம்பியல் பிரச்சினை ஏற்பட்டால் கண் பார்வை முற்றிலும் இழக்கும் அபாயம் இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
நீரிழிவு நோயாளிகளில் 47 விழுக்காட்டிலிருந்து 64 விழுக்காட்டினருக்கு இந்த விழி வெண்படல நரம்பியல் பிரச்சினை ஏற்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவு அதிகமாக இருக்கும்போது அது விழி வெண்படலத்தில் உள்ள நரம்புகளைப் பாதித்து அழற்சியை ஏற்படுத்துகிறது.
இதனால் கண்ணில் எரிச்சல் ஏற்பட்டு இலேசான பாதிப்பு ஏற்படுவோருக்கு விழி வெண்படலத்தில் உணர்ச்சிகள் இல்லாத நிலை ஏற்படலாம்.
மிக கடுமையான பாதிப்புக்கு ஆளானோர் கண் பார்வையை இழக்கக்கூடும்.
தற்போது இதைக் குணப்படுத்த மருந்து ஏதும் இல்லை. நிலைமையைக் கட்டுக்குள் வைத்திருக்க கண் சொட்டு மருந்து மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன.
ஆனால் இது விரைவில் மாறக்கூடும். சிங்கப்பூர் கண் ஆய்வுக் கழகம், சிங்கப்பூர் தேசிய கண் மையம், சிங்கப்பூர் பொது மருத்துவமனை, டியூக்-என்யுஎஸ் மருத்துவப் பள்ளி ஆகியவற்றைச் சேர்ந்த 15 ஆய்வாளர்கள் நடத்திய சோதனைத் திட்டம் மூலம் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
30 நாள்களுக்கு நடத்தப்பட்ட சோதனைத் திட்டத்தின்போது நீரிழிவு நோயால் விழி வெண்படல நரம்பியல் பிரச்சினை ஏற்பட்ட 30 நோயாளிகளுக்கு ஃபெனோஃபைபிரேட் மருந்து தரப்பட்டது. அந்த நோயாளிகளுக்கு ஒவ்வொரு நாளும் 100 மில்லிகிராம் முதல் 300 மில்லிகிராம் வரை ஃபெனோஃபைபிரேட் மருந்து கொடுக்கப்பட்டது.
இதன்மூலம் அவர்களது விழி வெண்படலத்தில் உள்ள நரம்புகள் வலுவடைந்ததாக ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்.
இந்த மருந்து கட்டுப்படியான விலையில் விற்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
200 மில்லிகிராம் மாத்திரை சிங்கப்பூரில் தோராயமாக 85 காசு முதல் $1.10 வரை விற்கப்படுகிறது. நீரிழிவு நோய் காரணமாக விழி வெண்படல நரம்பியல் பிரச்சினையால் பாதிக்கப்பட்ட குறைந்தது 200 நோயாளிகளுக்கு சோதனைத் திட்டத்தின்கீழ் இந்த மருந்தை ஆய்வாளர்கள் தந்து தங்கள் கண்டு
பிடிப்பை உறுதி செய்ய திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

