கேலாங் வட்டாரத்தில் போக்குவரத்துக் காவல்துறை அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையின்போது தப்பியோடிய 22 வயது ஆடவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று முன் தினம் இரவு 11.55 மணியளவில் அந்த வட்டாரத்தில் அதிகாரிகள் வாகனங்களைச் சோதிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது வாகனத்தைச் சோதிக்க ஒப்புக்கொள்ளாத ஆடவர், கேலாங் லோரோங் 22 வழியாகத் தப்பி ஓடியதாகக் கூறப்பட்டது.
சந்தேகத்தின் பேரில் அவரை போக்குவரத்துக் காவல்துறை அதிகாரிகள் தடுத்துவைத்தனர்.
பின்னர் அவரிடம் அபாயகரமான ஆயுதம் இருந்தது தெரியவந்தது.
ஆயுதம் வைத்திருந்தது, போக்குவரத்துக் குற்றம் ஆகியவற்றுக்காக அதிகாரிகள் அந்த ஆடவரைக் கைது செய்தனர்.
அவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. காவல்துறை விசாரணை தொடர்கிறது.
சம்பவம் தொடர்பில் 'எஸ்ஜி ரோட் விஜிலாண்டே' ஃபேஸ்புக் பக்கத்தில் காணொளி ஒன்று பதிவிடப்பட்டுள்ளது. காணொளியில் மோட்டார்சைக்கிள் ஒன்று சாலையில் சறுக்கி விழுந்தபின் அதை ஓட்டிய ஆடவர் எழுந்து ஓடுவதையும் காவல்துறையினர் இருவர் மோட்டார்சைக்கிள்களில் விரைவதையும் காண முடிகிறது.
ஆடவர் தனது மோட்டார் சைக்கிளை வெகு வேகமாகச் செலுத்தியதையும் காவல்துறையினர் துரத்துவதையும் பார்த்ததாக, சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் சீன மொழி நாளேடான ஷின் மின் டெய்லியிடம் கூறினார்.
பின்னர் மோட்டார்சைக்கிளைக் கைவிட்டு ஆடவர் ஓடியதாகவும் அதிகாரிகள் அவரைத் துரத்திப் பிடித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

