'சிங்கப்பூர் ஐடல்' எனும் பாட்டுத் திறன் போட்டியின் தலைமை நடுவராகச் செயல்பட்ட 58 வயது கென் லிம் சி சியாங் (படம்) மீது நேற்று மானபங்கக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
'ஹைப் ரெகார்ட்ஸ்' எனும் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரான லிம், 25 வயதுப் பெண்ணை மானபங்கப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. ஹெண்டர்சன் ரோட்டில் அமைந்திருக்கும் 'ஹைப் ரெகார்ட்ஸ்' அலுவலகத்தில் கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 23ஆம் தேதி அவர் அவ்வாறு நடந்துகொண்டதாகக் கூறப்பட்டது.
பாதிக்கப்பட்ட பெண்ணின் அடையாளத்தைக் காக்கும் பொருட்டு மேல்விவரங்கள் வெளியிட அனுமதி இல்லை.
நேற்றுக் காலை 9.25 மணிக்கு நீதிமன்றத்தில் லிம்மிடம் அவர்மீதான குற்றச்சாட்டு படித்துக் காட்டப்பட்டது. உறுதியான பார்வையுடன் காணப்பட்ட அவருடன் அவரது மனைவி வந்திருந்தார். இவர்களுக்கு இரு மகன்கள் உண்டு.
கிட்டத்தட்ட 15 மாத விசாரணைக்குப் பிறகு லிம் தான் குற்றமற்றவர் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாகவும் குற்றத்தை ஒப்புக்கொள்ளப் போவதில்லை என்றும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
$10,000 பிணையில் வெளிவந்த அவர் வெளிநாடு செல்ல அனுமதி கோரினார்.
சொத்துச் சந்தை தொடர்பான விவகாரங்களை முன்னிட்டு மே மாதம் 25ஆம் தேதி முதல் ஜூன் மாதம் 4ஆம் தேதி வரை தாய்லாந்தின் புக்கெட் நகருக்குச் செல்ல அவர் சார்பில் விண்ணப்பிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு பிணைத் தொகை $20,000ஆக உயர்த்தப்பட்ட நிலையில் லிம்மின் நண்பர் பிணையைச் செலுத்தினார். தாய்லாந்து செல்வதற்கு முன்னர் லிம் தனது முழு பயணத் திட்ட விவரங்ளை அதிகாரிகளிடம் சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. வழக்கு விசாரணை ஏப்ரல் 14ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் லிம்மிற்கு மூன்று ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனையுடன் அபராதமும் விதிக்கப்படக்கூடும். அவர் 50 வயதைக் கடந்தவர் என்பதால் பிரம்படியிலிருந்து விலக்கு அளிக்கப்படும்.

