சிங்கப்பூர், மலேசியாவைச் சேர்ந்தவர்கள், ஒருவர் மற்றவர் நாட்டுக்குச் செல்லும்போது எளிதாக கட்டணங்களைச் செலுத்த புதிய கியூஆர் குறியீடு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் நாணய ஆணையமும் மலேசிய பேங்க் நெகாராவும் கூட்டாக இப்புதிய கட்டண முறையை நேற்று அறிவித்தன.
இந்தத் திட்டத்தில் பங்கேற்கும் வங்கி, நிதி நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் 'நெட்ஸ் மற்றும் 'டுஇட்நவ்' கியூஆர் குறியீடு மூலம் கட்டணங்களைச் செலுத்தலாம்.
எல்லை தாண்டிய மின்வர்த்தக பரிவர்த்தனைகளுக்கும் இதனைப் பயன்படுத்த முடியும் என்று இரு அமைப்புகளும் தெரிவித்தன. நேற்றைய நிலவரப்படி சிங்கப்பூரைச் சேர்ந்த டிபிஎஸ், ஓசிபிசி, யுஓபி ஆகியவை இத்திட்டத்தில் இணைந்துள்ளன.
மலேசியாவில் அம்பேங் மலேசியா, பூஸ்ட் சிஐஎம்பி பேங், ஹோங் லியோங் வங்கி, மே பேங்க் வங்கி, பப்ளிக் பேங், ரேஸர் மெர்ச்சண்ட் சர்வீசஸ், டிஎன்ஜி டிஜிட்டல், யுஓபி மலேசியா உள்ளிட்டவை இதில் பங்கேற்றுள்ளன.
கொள்ளைநோய் பரவலுக்கு முன்பு இரு நாடுகளுக்கு இடையே ஆண்டுக்கு 12 மில்லியன் பேர் பயணம் செய்துள்ள நிலையில் வர்த்தகர்களையும் வாடிக்கையாளர்களையும் இணைக்கும் இந்த கட்டண முறை இரு தரப்புக்கும் எளிதாகவும் வலுவாகவும் இருக்கும் என்று ஆணையம், பேங்க் நெகாரா ஆகியவற்றின் கூட்டு அறிக்கை தெரிவித்தது. இவ்வாண்டு இறுதிக்குள் எல்லைகளுக்கு இடையே ஒருவருக்கு ஒருவர் நிதியனுப்பும் சேவையைத் தொடங்கும் திட்டமிருப்பதாகவும் அவை தெரிவித்தன.
ஆணையத்தின் நிர்வாக இயக்குநரான ரவி மேனன், இரு நாடுகளையும் இணைக்கும் கியூஆர் குறியீடு, இவ்வட்டாரத்தில் தடையற்ற கட்டண இணைப்பு முறையை உருவாக்கும் ஆசியானின் நோக்கத்தில் முக்கிய மைல்கல் என்று வருணித்தார்.
இத்தகைய எல்லை தாண்டிய இணைப்புகள் குடியரசின் எல்லைகளுக்கு அப்பால் வர்த்தகங்களையும் மேம்படுத்துவதோடு பரவலான வாடிக்கையாளர் களுக்குச் சேவையாற்ற சிறிய நிறுவனங்களுக்கும் வாய்ப்பு அளிக்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.

