ரச்சனா வேலாயுதம்
கடந்த 2014ஆம் ஆண்டிலிருந்து ஞாயிற்றுக்கிழமைதோறும் தேக்கா வட்டாரத்தில் உள்ள டன்லப் சாலை நண்பகல் 12 மணியிலிருந்து நள்ளிரவு 12 மணிவரை மூடப்படுகிறது. வாகன நெரிசலைச் சமாளிக்கவும் வாரயிறுதிகளில் வெளிநாட்டு ஊழியர்கள் அதிக அளவில் வரு
வதாலும் இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்டது. ஆனாலும், இந்தத் திட்டத்தை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி, வணிகத்தை மேம்படுத்த டன்லப் சாலையில் சிலர் தற்காலிகக் கடைகளை அமைப்பது, பலருக்கும் இடையூறாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
அதிகரிக்கும் வாடகையைச் சமாளிக்க கடைகளுக்கு வெளியே உள்ள இடத்தை சிலர் வாடகைக்குக் கொடுத்துள்ளனர். அண்மையில், நாணய மாற்றுக் கடைக்கு வெளியே தையல் கடை ஒன்றைத் தொடங்க இடம் வாடகைக்கு விடப்பட்டது. அதில், இந்தச் சிறு வணிகங்கள் செயல்பட அனுமதி இல்லை என்பதால் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் இது நடக்கிறது.
சாலை தொடங்குமிடத்திலேயே பங்ளாதேஷ் ஊழியர்கள் சிலர் கடை அமைத்து கைப்பைகள், ஆடைகள், பயணப்பைகள் போன்றவற்றை விற்கின்றனர்.
சட்டத்துக்குப் புறம்பாக இந்தக் கடைகளை நடத்துவோர், வாடிக்கையாளர்களிடம் பணத்தை நேரடியாக வாங்க விரும்புகிறார்கள். பணமில்லாப் பரிவர்த்தனைகளை அவர்கள் தவிர்க்கிறார்கள் என்று அங்கு பயணப்பைகளை விற்கும் ஒருவர் கூறினார்.
காரணம், இடத்தை வாடகைக்குவிட்ட வணிகர்கள் மூலம் இந்தப் பணமில்லா பரிவர்த்தனை நடப்பதால், இந்தச் சட்டவிரோத கடைகளை அமைத்தோருக்கு பணம் கிடைக்க சில நாள்கள் ஆகும் எனச் சொல்லப்படுகிறது.
வெளிநாட்டு ஊழியர்களை தங்களின் கடைகளுக்கு ஈர்க்க சிங்டெல், ஸ்டார்ஹப் போன்ற தகவல் தொடர்பு நிறுவனங்களின் விளம்பர அட்டைகள் காட்சிப்படுத்தப்படுகின்றன.
கடைகளுக்கு வெளியே சிறு கூடாரங்களை அமைத்து, மக்களுக்குத் தேவைப்படும் கைப்பேசி சேவைகளை அளிப்பதோடு, பொருள்களும் விற்கப்படுகின்றன.
இந்தப் பழக்கத்தைப் பின்பற்றாத கடைகள், அந்தக் கூடாரங்கள் தங்களுக்கு இடையூறாக உள்ளதாகக் குறிப்பிட்டன. சாலை நடுவில் இப்படிக் கடைகளை அமைத்து பொருள்களை விற்பது, வாடகை செலுத்தி தொழில் செய்யும் வணிகர்களுக்குத் தொல்லையாக இருப்பதாகக் கடைக்காரர்கள் பலரும் கூறினர்.
சாலை மூடப்படுவதால் சிராங்கூன் சாலையிலிருந்து தமது கடைக்கு மளிகைப் பொருள்களை தள்ளுவண்டியில் ஏற்றிக்கொண்டு வரும் கடைக்காரர் ஒருவர், இந்தச் சாலையோரக் கடைகள் இடையூறாக இருப்பதாகப் பகிர்ந்துகொண்டார்.
நடக்க இடமில்லாத நிலையில் தள்ளுவண்டியை எடுத்துச்செல்ல சிரமப்படுவதாக அவர் கூறினார்.
கட்டணமில்லை என்பதால் சிலர் தங்களது வாகனங்களையும் அங்கு நிறுத்திவிட்டுச் செல்வதாகக் கூறப்படுகிறது.
"இதற்குமுன் அதிகாரிகளின் கண்காணிப்பு இருந்ததால், அவர்களால் வாகனத்தை நிறுத்த முடியவில்லை. ஆனால், ஒரு மாதமாக அதிகாரிகள் வராமல் இருப்பதால் நண்பகல் 12 மணிக்கு முன்பாக வாகனத்தை என் கடைக்குமுன் நிறுத்திவிடுகிறார்கள்," என்று டன்லப் சாலையில் கடை வைத்திருக்கும் ஒருவர் குறிப்பிட்டார்.
மக்களுக்கு நன்மையளிக்கும் என்ற நோக்கத்தில் குறிப்பிட்ட நேரத்திற்குச் சாலையை மூடும் திட்டத்தை அறிமுகப்படுத்தியபோதும், அதனைப் பலர் தவறாகப் பயன்படுத்தி மற்றவர்களுக்குச் சிரமத்தைக் கொடுப்பதாகப் பலரும் கவலை தெரிவித்தனர்.

