ஜூரோங்கிலிருந்து புதிய பறவைகள் மகிழ்வனத்துக்கு மாற்றும் பணி தொடர்கிறது
ஜூரோங் பறவைப் பூங்காவிலிருந்து 3,500 பறவைகளில் ஏறக்குறைய முக்கால்வாசி பறவைகள், அதாவது 75% பறவைகள் மண்டாயில் அடுத்த மாதம் திறக்கப்பட இருக்கும் ‘பேர்ட் பேரடைஸ்’ எனப்படும் பறவைகள் மகிழ்வனத்துக்கு மாற்றப்பட்டுள்ளன.
எஞ்சியுள்ள பறவைகள் வரும் வாரங்களில் மாற்றப்பட உள்ளதாக மண்டாய் வனவிலங்கு குழுமம் நேற்று கூறியது.
இது தொடர்பாக, குழுமத்தின் விலங்கு பராமரிப்புப் பிரிவின் துணைத் தலைவர் டாக்டர் லுயிஸ் நீவ்ஸ் ‘ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்’ நாளிதழிடம் பேசினார்.
மூடப்பட்ட ஜூரோங் பறவைப் பூங்காவிலிருந்து மண்டாய் புதிய பறவைக்கூடத்திற்கு பறவைகளை மாற்றும் பணி இவ்வாண்டு ஜனவரி 4ஆம் தேதி முதல் நடைபெற்று வருவதாக அப்போது அவர் தெரிவித்தார்.
மண்டாய் பறவைகள் மகிழ்வனம் மே 8ஆம் தேதி திறக்கப்படுகிறது. பறவைகளை இடமாற்றம் செய்து இங்கு கொண்டு வரும் முடிவு இரண்டு அம்சங்களின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட்டதாக அவர் கூறினார்.
மண்டாய் பறவைகள் மகிழ்வனம் புதிய பறவைகளை ஏற்கத் தயாராக இருத்தல், ஜூரோங் பறவைப் பூங்காவிலிருந்து எந்தப் பறவைகளை முதலில் இடமாற்றம் செய்வது ஆகிய அம்சங்கள் அவை.
உதாரணத்திற்கு, ஜூரோங்கின் நீர்வீழ்ச்சி பறவைக்கூடத்தில் இருந்த கறுப்புநிறக் கொண்டை கொக்குகள் இரண்டு, பழைய பறவைப் பூங்காவிற்குள் பெரிய கூண்டுக்கு இடமாற்றம் செய்யப்பட்டன.
பிப்ரவரி மாதம் புதிய இடத்திற்கு மாற்றப்படும் வரை அவை அந்தக் கூண்டில் வைக்கப்பட்டு இருந்தன என்று டாக்டர் நீவிஸ் விளக்கினார்.
மாற்றப்படுவதற்கு முன்னால் பறவைகள் பலவற்றையும் கலந்து மண்டாய்க்கு அனுப்பும் பணியில் ஜூரோங் பறவைப் பூங்காவின் பறவைக் காப்பாளர்கள் ஈடுபட்டனர்.
ஒன்றோடொன்று இணைந்து வாழக்கூடிய பறவைகள் இனம் கண்டு அவற்றை அவர்கள் புதிய இடத்திற்கு மாற்றினார்கள்.
“காரணம், சில பறவைகள் சேர்ந்து வாழும் தன்மையுடையவை என்று நாம் நினைத்திருப்போம். ஆனால், நடைமுறையில் அவை சேர்ந்து வாழாதவையாக இருக்கலாம்,” என்றார் அவர்.
பொருந்தாத தன்மையினால், மண்டாய் பறவைகள் மகிழ்வனத் துக்கு மாற்றப்படும் பறவைகளிடையே ஏற்படக்கூடிய மனஉளைச்சலைக் குறைக்க இந்த அணுகுமுறை உதவியதாகவும் அவர் கூறினார்.
அத்துடன், பறவைகள் தாங்களாகவே கூண்டுக்குள் நுழைய பராமரிப்பாளர்கள் பயிற்சி அளித்தார்கள்.
பறவைகளைப் பாதுகாக்க முன்னுரிமை அளிக்கும் இடமாற்ற அணுகுமுறை இது. அதேநேரம் உயரமான கால்கள் மற்றும் நீண்ட கழுத்து உள்ள கொக்குகளும் பறவைகளும் வலைகளுக்குள் இருப்பதை விரும்பாதவை.
எனவே கூண்டுக்குள் வைக்கப்படும் முன்னர் அவற்றுக்கான வலைகள் அகற்றப்பட்டன. பறவைகள் தங்களைத் தாங்களே காயப்படுத்திக்கொள்வதைத் தவிர்க்கவும் பாதுகாப்பான, சுமுகமான இடமாற்றத்திற்காகவும் இவ்வாறு செய்யப்பட்டதாக டாக்டர் நீவ்ஸ் கூறினார்.
இடமாற்றத்தின்போது மருத்துவ உதவி தேவைப்படும் பறவைகளின் எண்ணிக்கை பழைய பறவைப் பூங்காவில் வழக்கமான பராமரிப்பில் ஈடுபடுத்தப்படும் எண்ணிக்கையிலிருந்து பெரிதாக உயரவில்லை என்றார் அவர்.
“பறவைகளுக்கு அதிகபட்ச பராமரிப்பு அளிப்பது பற்றியும் இயன்றவரை அவை காயமடையாமல் பார்த்துக்கொள்ளப்படுவது பற்றியும் நாங்கள் எப்போதும் கவனமாக இருப்போம்.
“பெரியதொரு பறவைக்கூட்டம் என்பதாலும் அவற்றுக்குள்ளும் சில நேரங்களில் சண்டை ஏற்படும் என்பதாலும் எங்களின் கவனம் அவற்றின்மீது இருக்கும்,” என்றார் டாக்டர் நீவ்ஸ்.