அறிவார்ந்த நகரங்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இவ்வாண்டு சிங்கப்பூர் உலக அளவில் 7வது இடத்தையும் ஆசிய நகரங்களில் முதல் இடத்தையும் பிடித்துள்ளது.
உயர் வாழ்க்கைத் தரத்தை எட்டுவதில் உள்ள சவால்களை எதிர்கொள்ள நகரங்கள் தொழில்நுட்பத்தை எவ்வாறு பயன்படுத்தித் தீர்வு காண்கின்றன என்பதன் அடிப்படையில் தரவரிசைப்படுத்தப்பட்ட பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.
சுவிட்சர்லாந்து வணிகக் கழகத்தின் நிர்வாக மேம்பாட்டுக் கழகம் (ஐஎம்டி) வெளியிட்ட இந்தப் பட்டியலில் 141 நகரங்கள் இடம்பெற்று உள்ளன.
சுவிட்சர்லாந்தின் ஸுரிக் நகரம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. நார்வேயின் ஓஸ்லோ இரண்டாமிடத்தையும் ஆஸ்திரேலியாவின் கேன்பரா மூன்றாமிடத்தையும் பிடித்துள்ளன.
2020, 2021 ஆண்டுகளிலும் உலகளவில் சிங்கப்பூர் ஏழாம் இடத்தையே பிடித்திருந்தது. சென்ற ஆண்டு அறிவார்ந்த நகரங்கள் பட்டியல் வெளியிடப்படவில்லை.
வீட்டு விலை, போக்குவரத்து நெரிசல், வேலைவாய்ப்பு உள்ளிட்ட 15 அம்சங்கள் குறித்து, அந்த 141 நகரங்களில் ஏறக்குறைய 20,000 பேரிடம் கருத்துகள் சேகரிக்கப்பட்டன.
ஆசிய அளவில் முதலிடம் பிடித்துள்ள சிங்கப்பூர், மருத்துவச் சேவைகள், தரமான கல்வி, பசுமையான இடங்கள் போன்ற அம்சங்களில் உயர்ந்த தரநிலையைப் பிடித்தது.
பல்வேறு கட்டமைப்புகள் மற்றும் தொழில்நுட்பங்கள் பற்றியும் அவர்களிடம் கேட்கப்பட்டது. முக அடையாள அங்கீகாரம், தனிநபர் தரவுப் பகிர்வு போன் அம்சங்களில் தொழில்நுட்பம் எந்த அளவுக்குக் கைகொடுக்கிறது என கேட்கப்பட்டது.
2019ஆம் ஆண்டு முதல் தங்களது செயல்பாடுகளில் தொடர்ந்து முன்னேற்றம் கண்டு வரும் ஆறு நகரங்களில் சிங்கப் பூரும் ஒன்று என குறியீடு குறிப் பிட்டுள்ளது. ஸூரிக், ஓஸ்லோ, பெய்ஜிங், சோல், ஹாங்காங் ஆகியன இதர ஐந்து நகரங்கள்.
ஆய்வு நடத்தப்பட்ட 141 நகரங்களில் பட்டியலின் முதல் 20 இடங்களில் ஆசிய, ஐரோப்பிய நகரங்களே முன்னிலை வகிப்பதாக இவ்வாண்டின் குறியீடு தெரிவித்துள்ளது.
பொதுமக்கள் பாதுகாப்பு, இணையச் சேவையின் வேகம், நல்ல பள்ளிக்கூடங்களில் குழந்தைகளைச் சேர்த்தல் போன்ற தலைசிறந்த அம்சங்கள் உள்ளிட்ட பலவற்றில் சிங்கப்பூரின் தரம் உயர்ந்துள்ளதாக ஆய்வில் பங்கேற்றவர்கள் கருத்து தெரிவித்தனர்.
ஒவ்வொரு நகரத்திலும் ஏறக்குறைய 120 பேரிடம் கருத்து திரட்டப்பட்டது. அறிவார்ந்த நகரங்கள் என்னும் தோற்றம் மாறிவருவதாக ஐஎம்டியின் அறிவார்ந்த நகரத் தேர்வு கண்காணிப்பாளர் டாக்டர் புரூனோ லான்வின் கூறினார்.
வெளிப்படைத்தன்மை, புத்தாக்கம், அனைவரையும் அரவணைக்கும் போக்கு மற்றும் தாக்குப்பிடிக்கும் தன்மைக்கான முன்னேற்றத்தைக் குறிக்கும் ஓர் அம்சமாக அறிவார்ந்த நகரக் குறியீடு அமைவதாக அவர் தெரிவித்தார்.
“புதிய உலகம் உருவாகி வருகிறது. நகரங்களில் நிகழ்ந்து வரும் மாற்றங்கள் எதிர்காலத்தில் நிகழக்கூடிய வற்றை உணர்த்தும் அறிகுறி,” என்றார் அவர்.