சிங்கப்பூரில் இதுவரை இல்லாத வித்தியாசமான உணவு வகைகள் விற்பனைக்கு வரவிருக்கின்றன.
சிங்கப்பூர் உணவு அமைப்பு, ஏறக்குறைய 16 வகையான புழு, பூச்சியினங்களை உணவாக விற்க இவ்வாண்டின் 2ஆம் பாதியில் அனுமதியளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் வெட்டுக்கிளி, பட்டுப்புழு போன்றவை நேரடியாகவோ வறுத்தோ நொறுக்குத் தீனியாகவோ உணவகங்களில் விற்கப்படலாம்.
ஆனால் உணவுப் பாதுகாப்பு தேவைகளுக்கு உட்பட்டு பூச்சி உணவு வகைகளுக்கு அனுமதி யளிக்கப்படும்.
பூச்சிகளை உணவாக உட்கொள்ள மேற்கொள்ளப்படும் முறைகள், கலப்படமில்லாமல் பாதுகாப்பாக பதப்படுத்துதல் உள்ளிட்ட அம்சங்கள் கவனமாகப் பரிசீலிக்கப்படும்.
கடந்த ஆண்டு அக்டோபர் 5 முதல் டிசம்பர் 4 வரை புழு, பூச்சி உணவுப் பொருள்களை ஒழுங்குபடுத்துவதற்கான பொது ஆலோசனைகள் நடைபெற்றன. இதையடுத்து இத்தகைய உணவு வகைகளுக்கு அனுமதியளிக்க சிங்கப்பூர் உணவு அமைப்பு முன்வந்தது. பொது ஆலோசனைகளில் 53 பேர் பதிலளித்திருந்தனர். பூச்சி உணவு வகைகளை இங்கு இறக்குமதி செய்யத் திட்டமிடும் தொழில்துறையினர் பற்றி சிலர் கவலைகளையும் மற்றும் சிலர் சந்தேகங்களையும் எழுப்பியிருந்தனர்.
இதற்குப் பதிலளித்த அமைப்பு, அறிவியல்ரீதியிலான மதிப்பாய்வுகள் நடத்தப்பட்டுள்ளதாக கடந்த அக்டோபரில் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சுக்கு அளித்த பேட்டியில் கூறியிருந்தது. மனிதர்கள் உட்கொள்ளும் வரலாற்றைக் கொண்ட குறிப்பிட்ட சில வகை பூச்சிகளை நேரடி உணவாகவோ அல்லது இதர வகை உணவு வகைகளாகவோ வழங்குவது குறித்து மதிப்பீடு செய்யப்பட்டதாகவும் அந்த அமைப்பு தெரிவித்தது.
உலகில் மக்கள்தொகை அதிகரித்து வரும் வேளையில் மலிவான விலையில் நீடித்த நிலைத்தன்மையுடன் உணவளிக்கும் முயற்சியாக பூச்சி உணவுகளை அண்மைய ஆண்டுகளாக ஐநா உணவு மற்றும் வேளாண் அமைப்பு ஊக்குவித்து வருகிறது. பண்ணைகளில் வளர்க்கப்படும் கால்நடைகளுடன் ஒப்பிடும்போது உண்ணக்கூடிய பூச்சிகள் உயர்தர ஊட்டச்சத்தை அளிப்பதோடு குறைவான தீவனம் தேவைப்படுகிறது. அது மட்டு மல்லாமல் கரிம வெளியேற்றம் குறைவாக இருப்பதால் அவற்றால் பசுமை சூழலுக்கு அதிகம் பாதிப்பில்லை.