இணைய மோசடிச் சம்பவங்கள் அதிகரித்துவரும் வேளையில், அகண்ட அலைவரிசைக் கட்டமைப்பில் உள்ளடக்கப்பட்டிருக்கும் வடிப்பான்களின் உதவியோடு, தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இணையக் குற்றவாளிகள் பயன்படுத்தும் தீங்குநிரல்களைக் கண்டுபிடித்து வருகின்றன.
அலுவலகங்களில் அல்லது இல்லங்களில் இணையம் மூலம் இணைக்கப்பட்ட மடிக்கணினிகள், கைப்பேசிகள், சுகாதாரப் பராமரிப்புச் சாதனங்கள் முதலிய தொலைத்தொடர்புச் சாதனங்களில் உள்ள முக்கியமான தரவு, இணைய ஊடுருவிகளின் கைகளில் சிக்கிக்கொள்வதைத் தடுக்கும் விதத்தில் இந்த அகண்ட அலைவரிசை வடிப்பான்கள் காவல்காரனாகச் செயல்படுகின்றன.
அகண்ட அலைவரிசைப் பாதுகாப்பு வழங்கும் முதலாவது தொலைத்தொடர்பு நிறுவனமாக சிங்டெல் விளங்குகிறது. அது வசூலிக்கும் மாதக் கட்டணத்துக்கு தீங்குநிரல்களுக்கு எதிரான முதல்நிலை பாதுகாப்பு அரணாகத் திகழ்கிறது.
இந்த வடிப்பான்கள் பொதுவாக தடை செய்யப்பட்ட பட்டியலில் உள்ள தளங்களையும் தொடர்புகளையும் தடுக்கின்றன. அதனைத் தடுக்க அவை முதலில் தொலைத்தொடர்பு நிறுவனத்தின் தரவுத்தளத்தில் இடம்பெற்றிருக்க வேண்டும்.
இந்தத் தளங்களுக்குள் நுழைவோர் தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கம் அல்லது இணைய கிருமிகள், தீங்குநிரல் தங்கள் அலுவலகங்களில் அல்லது இல்லங்களில் உள்ள வர்த்தகக் கட்டமைப்புகளில் இணையத் தாக்கு தல் ஏற்பட வழி ஏற்படுத்தித் தருகிறார்கள்.
இவ்வாண்டு பிப்ரவரியில் அறிமுகமான சிங்டெல்லின் 'புரோட்பேண்ட் புரோடெக்ட்' எனும் அகண்ட அலைவரிசைப் பாதுகாப்பு அம்சம் பயனாளரின் இணைய போக்குவரத்தில் உள்ள தீங்குநிரல்களை அடையாளம் கண்டு தடுத்து நிறுத்தும்.
பெரும்பாலும் வர்த்தகங்களை மையமாகக்கொண்டு செயல்படும் எம்1 நிறுவனத்தின் 'டைனமிக் ஃபைபர் புரோடெக்ட்' எனும் அம்சம் தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கம், தீங்குநிரல் ஆகியவற்றைத் தடுக்கும்.
'செக்கியோர்நெட்' எனப்படும் தொலைத்தொடர்பு நிறுவனம் இவ்வட்டாரத்தில் முதல் முறையாக பயனீட்டாளருக்கான அகண்ட அலைவரிசைப் பாதுகாப்பு அம்சத்தை அறிமுகப்படுத்தியது.
'செக்கியோர்நெட்' அம்சத்துக்கு, இணையக் கிருமிகளைக் கண்டுபிடித்து, மிரட்டல்களைத் தடுப்பது, பயனாளரின் அனுமதியின்றி அவரது தரவுகளைச் சேகரிக்கும் உளவுநிரலைக் கண்டுபிடிப்பது, இணையத் தாக்குதல் நடக்கக்கூடும் என்று பயனாளரை எச்சரிப்பது என மூன்று முக்கிய செயல்பாடுகள் உள்ளன.
ஸ்டார்ஹப் நிறுவனம் அகண்ட அலைவரிசை வடிப்பான் சேவையை வழங்குவ தில்லை. மாறாக, அது சைபர்புரோடெக்ட் எனப்படும் 'விபிஎன்' மெய்நிகர் தனியார் கட்டமைப்பு சேவையை வழங்குகிறது. அது ஆறு தொலைத்தொடர்புச் சாதனங்களில் இணைய மிரட்டல்களைத் தடுத்து நிறுத்துவதுடன் தீங்கு விளைவிக்கும் தளங்களுக்கு பிள்ளைகள் செல்லாமல் தடுப்பதற்கான பெற்றோர் கட்டுப்பாட்டையும் அளிக்கிறது.

