ஜூரோங் ஈஸ்ட்டில் உள்ள ஒரு கடையில் அத்துமீறி புகுந்து திருடினார் என்ற சந்தேகத்தின் பேரில் 43 வயது ஆடவர் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டார்.
ஜூரோங் ஈஸ்ட் ஸ்திரீட் 24ல் உள்ள ஒரு கடையில் பொருள்கள் திருடப்பட்டிருப்பது குறித்து காவல்துறைக்கு கடந்த செவ்வாய்க்கிழமை பிற்பகல் 1.30 மணிக்கு தகவல் கிடைத்தது.
$40,000 ரொக்கம், $6,000 மதிப்புள்ள சிகரெட்டுகள் கடையிலிருந்து திருடப்பட்டன என்று காவல்துறை நேற்று தெரிவித்தது.
பலரிடம் நடத்தப்பட்ட விசா ரணை மூலமும் காவல்துறை கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் மூலமும் கிளமெண்டி காவல்துறை தலைமையக அதிகாரிகள் திருடிய ஆடவரின் அடையாளத்தை உறுதிப்படுத்தி அவரை நேற்று கைது செய்தனர்.
அந்த ஆடவர் மீது அத்துமீறி நுழைந்து, திருடிய குற்றம் சாட்டப்படும். குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 10 ஆண்டுகள் வரையிலான சிறையும் அபராதமும் விதிக்கப்படலாம்.
சொத்தின் உரிமையாளர்கள் தங்கள் இடங்களின் கதவுகள், சன்னல்கள், உருளைக் கதவுகள் முதலியவற்றை உறுதியான பூட்டு களைக் கொண்டு பூட்டிவைக்க வேண்டும். தங்கள் இடங்களில் பெரிய அளவிலான ரொக்கம், நகைகள், மதிப்புள்ள பொருள்கள் முதலியவற்றை வைக்க வேண்டாம் என்றும் காவல்துறை ஆலோசனை கூறுகிறது.

