ஐநாவின் உயர்மட்ட பருவநிலை அறிவியல் அமைப்புக்கு முதல் முறையாக சிங்கப்பூரர் ஒருவரின் பெயர் முன்மொழியப்பட்டுள்ளது.
'ஐபிசிசி' எனப்படும் அரசாங்கங்களுக்கு இடையிலான பருவநிலை அறிவியல் அமைப்பில் இணைத் தலைவராகப் பணியாற்ற சிங்கப்பூரின் இணைப் பேராசிரியர் வின்ஸ்டன் சோவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
அறிவியல் அடிப்படையிலான பருவநிலை மாற்றம், அதன் தாக்கம், எதிர்கால ஆபத்துகள், நாடுகள் கரிம வெளியேற்றத்தை குறைப்பதற்கான வழிகள், அவற்றை அமலாக்குவதற்கான நடவடிக்கைகள் உள்ளிட்ட அறிக்கைகளை ஐபிசிசி தொடர்ந்து வெளியிட்டு வருகிறது.
இது, பருவநிலை தொடர்பான கொள்கைகளை வகுக்கவும் பருவநிலை மாற்றம் தொடர்பான ஐநா கட்டமைப்பு மாநாட்டின் கீழ் உலகளாவிய பருவநிலை மாற்றத்தின் நடவடிக்கைக்கு பங்காற்றவும் அரசாங்கங்களுக்கு உதவும்.
வளரும் நாட்டுக்கான இணைத் தலைவர் பதவி என்ற பொறுப்புக்கு பேராசிரியர் சோவ்வின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
அப்பதவியில் அவர் இவ்வாண்டு ஜூலையில் தொடங்கும் 'ஏஆர்7' எனும் ஏழாவது மதிப்பீட்டு அறிக்கைக்கு முக்கிய பங்காற்றுவார். பருநிலை மாற்றத்தின் தாக்கங்கள், அதனை ஏற்றுக்கொள்ளும் வழிகள் மற்றும் பாதிப்புகளில் இந்த அறிக்கை கவனம் செலுத்தும்.
ஐபிசிசியில் 34 உறுப்பினர்கள் இடம்பெற்றுள்ளனர். இவர்கள், ஐபிசிசியின் மதிப்பீடுகளில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அம்சங்களில் வழிகாட்டுவார்கள். அதன் தொடர்பான பிரச்சினை களுக்கு ஆலோசனைகளை வழங்குவார்கள்.
"இத்துறையில் நன்கு அனு பவம் பெற்றுள்ள பேராசிரியர் சோவ், பருவநிலை மாற்ற அறிவியலை மேம்படுத்துவதற்கும் அரசாங்கங்களும் சமூகங்களும் பருவநிலை அபாயங்களை எவ்வாறு திறம்பட சமாளிக்கலாம் என்பதற்கான நடைமுறை பரிந்துரைகளை வடிவமைக்கவும் தகுதி பெற்றவர்," என்று நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சு தெரிவித்தது.
ஐபிசிசி 'ஏஆர்7' மதிப்பீட்டில் நகரங்கள் மற்றும் பருவநிலை மாற்றம் குறித்த சிறப்பு அறிக்கையைச் சேர்க்க முடிவு செய்யப் பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய அமைச்சு, இதில்தான் அவர் அதிக ஆராய்ச்சி மற்றும் களப்பணிகளைச் செய்துள்ளார்." என்பதை நினைவூட்டியது.
பேராசிரியர் சோவ், சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக் கழகத்தில் நகர்ப்புற பருவநிலை துறையில் இணைப் பேராசிரியராக இருந்து வருகிறார்.
ஐபிபிசியின் அறிக்கை களுக்கு அவர் பங்காற்றியுள்ளார்.
சிங்கப்பூரில் நகர்ப்புற வெப்பப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண பல்வேறு ஆய்வுக் குழுக்கள் இணைந்து செயல்படும் சிங்கப்பூரை குளிர்விக்கும் முயற்சிக்கு 2017ஆம் ஆண்டு முதல் அவர் தலைமை தாங்கி வருகிறார்.

