பேருந்து ஓட்டுநர்களை ஏற்றி வருவதற்காக எஸ்பிஎஸ் டிரான்சிட் பேருந்தை ஓட்டிச் சென்ற லியு ஷான் லியுங், 55, என்பவர் (படம்), டெஃபூ அவென்யூ 1ல் சென்ற ஆண்டு அக்டோபர் அதிகாலை 2.45 மணியளவில் நிகழ்ந்த விபத்தில் மரணமடைந்துவிட்டார்.
பணிமனையில் பேருந்தைத் திருப்பியபோது தவறி வாகனம் ஒரு மரத்தின்மீது மோதிவிட்டது. அந்தச் சம்பவத்தில் திரு லியு பலத்த காயமடைந்தார்.
அவரின் மரணம் பற்றிய விசாரணை நேற்று நடந்தது. போக்குவரத்து தொடர்பான துரதிர்ஷ்டவசமான ஒரு சம்பவம் என்று மரண விசாரணை அதிகாரி தீர்ப்பளித்தார்.
அந்த மரணத்தை வேலையிட விபத்து என்று மனிதவள அமைச்சு வகைப்படுத்தியுள்ளது.
வழக்கு விசாரணையின்போது சாட்சியம் அளித்த மூத்த ஸ்டாஃப் சார்ஜண்ட் கமலேஷ் காமிஸ், திரு லியு ஐந்தாண்டு காலமாக பேருந்து ஓட்டி வந்தார் என்றும் அவருக்கு ரத்த அழுத்தப் பிரச்சினை இருந்தது என்றும் கூறினார்.
ஆனால், 2022 ஜூலையில் பரிசோதனை செய்துகொண்டபோது அவரது உடல்நிலை நல்ல முறையில் இருந்தது என்றும் அந்த அதிகாரி சாட்சியம் அளித்தார்.