சிங்கப்பூரில் அரியவகை நோய்கள் உடைய 2,000 முதல் 3,000 பேரில் வெறும் ஒன்பது சிங்கப்பூரர்களுக்கு (0.4%) அரியவகை நோய்களுக்கான நிதியிலிருந்து உதவி கிடைத்துள்ளது. 2019ல் அந்த நிதி தொடங்கப்பட்டது.
அரியவகை நோய்கள் உடையவர்களில் பெரும்பாலானோருக்கு மெடிசேவ், மெடிஷீல்ட் லைஃப் போன்ற திட்டங்கள் மற்றும் கட்டணக் கழிவுகள் மூலம் நிதியுதவி கிடைப்பதாக சுகாதார அமைச்சர் ஓங் யி காங் தெரிவித்துள்ளார்.
மருத்துவக் கட்டணங்களைச் செலுத்த சிரமப்படுவோர், பொதுச் சுகாதாரக் கழகங்கள் மூலம் மெடிஃபண்ட் திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம்.
சிறிய எண்ணிக்கையிலான நோயாளிகளுக்குக் கூடுதல் நிதியுதவி தேவைப்படலாம். இந்தப் பிரிவினர் அதிக விலையுடைய மருந்துகளை வாங்க உதவ அரியவகை நோய்களுக்கான நிதி தொடங்கப்பட்டதாக திரு ஓங் விவரித்தார்.
"இந்த நிதி குறிப்பிட்ட அளவில் மட்டும் இருப்பதால், உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் அரியவகை நோய்களுக்கான சிகிச்சைகளுக்கு நிதியாதரவு வழங்கப்படுகிறது.
"நோயாளியின் ஆயுட்காலத்தை நீட்டிக்க அத்தகைய சிகிச்சைகள் பலன்தரும் விதமாக இருக்கும் பட்சத்தில் அவற்றுக்கு நிதியாதரவு அளிக்கப்படுகிறது," என்றார் திரு ஓங்.
அந்த நிதி மற்றும் அதன் பயனர்கள் குறித்து பாட்டாளிக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் லுயிஸ் சுவா எழுப்பிய கேள்விகளுக்கு மார்ச் 22ஆம் தேதி திரு ஓங் அளித்த நாடாளுமன்றப் பதிலில் இந்த விவரங்களைப் பகிர்ந்தார்.
ஐந்து அரியவகை நோய்களுக்கான ஏழு மருந்துகளை தற்போது அந்த நிதி உள்ளடக்குகிறது.
அந்த நிதியை நிர்வகிக்கும் கேகே மகளிர், சிறார் மருத்துவமனை சுகாதார நிதியம், நன்கொடைகளைச் சார்ந்திருக்கிறது. மூன்றுக்கு ஒன்று எனும் விகிதத்தில், அந்த நன்கொடைகளுக்குத் தகுந்தவாறு அரசாங்கம் நிதி ஆதரவு வழங்குகிறது.
நன்கொடை வழங்குவோர் அளிக்கும் தொகையைவிட 2.5 மடங்கு அதிகம் வரிக்கழிவைப் பெறுவர்.
இதற்கிடையே, எத்தனை சிங்கப்பூரர்களிடம் முதுகெலும்புத் தசைநார் வலுவிழப்பு நோய் (Spinal Muscular Atrophy) கண்டறியப்பட்டுள்ளது என்றும் அதற்கு அளிக்கப்படும் சிகிச்சைக்கான செலவுகள் குறித்தும் திரு சுவா கேட்டிருந்தார்.
அதற்குப் பதிலளித்த திரு ஓங், சிங்கப்பூரில் தற்போது 40 முதல் 50 பேரிடம் அந்நோய் கண்டறியப்பட்டுள்ளதாகக் கூறினார்.
"அரியவகை நோய்களுக்கான நிதி, தொடர்ந்து நன்கொடைகளைப் பெறுவதுடன் கூடுதலான அரியவகை நோய்கள் இதில் சேர்க்கப்படுவது குறித்து ஆராயப்படும்," என்று திரு ஓங் சொன்னார்.
வாழ்நாள் முழுவதும் மருந்துகள் தேவைப்படும் நோயாளிகளுக்கு ஆதரவளிக்கும் விதமாக, போதுமான முதலீட்டு வருவாயை ஈட்ட நன்கொடைகளை ஈர்க்க முடியும்போது, புதிய மருந்துகளை அந்த நிதி பட்டியலிடும் என்றும் திரு ஓங் கூறினார்.

