விரைவுச்சாலை விபத்து:
ஏழு பேர் மருத்துவமனையில்
தெம்பனிஸ் விரைவுச்சாலையில் திங்கட்கிழமை மாலை நிகழ்ந்த சாலை விபத்தை அடுத்து ஏழு பேர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அந்த விபத்தில் நான்கு வாகனங்கள் மோதிக்கொண்டன.
நான்கு லாரிகள் சம்பந்தப்பட்ட அந்த விபத்து, சிலேத்தார் விரைவுச்சாலைக்குச் செல்லும் தெம்பனிஸ் விரைவுச்சாலையில் பொங்கோல் ரோடு வெளிவழிக்கு அப்பால் இரவு 7.45 மணிக்கு நிகழ்ந்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.
குட்டி லாரிகளை ஓட்டிவந்த 23, 24 வயதுகளில் உள்ள இரண்டு ஓட்டுநர்களும் ஐந்து பயணிகளும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது சுய நினைவுடன் இருந்ததாக காவல்துறை தெரிவித்தது.புலன்விசாரணை தொடர்கிறது.
'வீச்சேட்' வழி சட்டவிரோதமான செயல்: மாது மீது குற்றச்சாட்டு
லி ஃபெங்லி என்ற 47 வயது மாது, சென்ற ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பர் வரை, வீச்சேட் வழியாக சட்டவிரோதமாக பணம் அனுப்பும் முறை ஒன்றை நடத்திவந்தார் என்று கூறப்படுகிறது.
அதன் மூலம் அவர் சிங்கப்பூரில் நான்கு பேரிடம் இருந்து $214,000க்கும் மேற்பட்ட தொகையைப் பெற்றிருக்கிறார் என்றும் கூறப்படுகிறது. அந்த மாது மீது ஏப்ரல் 5ஆம் தேதி குற்றம் சுமத்தப்பட்டது.
உரிமம் பெறாமல் எல்லை கடந்த பணமாற்றுச் சேவைகளை வழங்கும் தொழிலை அவர் நடத்தியதாகக் கூறப்படுகிறது. தில்லுமுல்லு செய்யப்பட்ட மின்னணுப் பதிவுகளை அந்த மாது உண்மையானவை என்றும் பாதிக்கப்பட்டவர்களிடம் காட்டி இருக்கிறார் என்றும் காவல்துறை நேற்று தெரிவித்தது.
7வது மாடியில் இருந்து விழுந்தார்: துரதிருஷ்ட சம்பவம் என தீர்ப்பு
மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகள், ஓல்டு ஏர்போர்ட் ரோடு அருகே உள்ள ஜாலான் தீகா, புளோக் 47ன் ஏழாவது மாடியில் உள்ள ஒரு வீட்டில் 2021ஆம் ஆண்டு நவம்பர் 30ஆம் தேதி சோதனையிட்டனர்.
அப்போது, கோ சுவே டீ, 59, என்ற போதைப் புழங்கி, வீட்டின் சன்னல் வழியாக வெளியேறி கீழே விழுந்து இறந்துவிட்டார். அந்த மரணம் பற்றி விசாரணை நடத்திய மரண விசாரணை அதிகாரி, அந்த ஆடவர் உயிரை மாய்த்துக்கொள்வதற்காக கீழே விழுந்திருக்கிறார் என்பதற்குச் சாட்சியம் இல்லை என்று சென்ற மாதம் 31ஆம் தேதி தீர்ப்பில் குறிப்பிட்டார்.
அதிகாரிகளிடம் இருந்து தப்பிக்க தனக்கு இருந்த ஒரே ஒரு வழியை அவர் பயன்படுத்தி இருக்கிறார். கோவின் மரணம் துரதிருஷ்டவசமான ஒரு சம்பவம் என்று அவர் தீர்ப்பில் கூறினார்.
அந்த ஆடவர், 1989 ஆம் ஆண்டுக்கும் 2005ஆம் ஆண்டுக்கும் இடையில் போதைப் புழக்கம், போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பல குற்றச் செயல்களுக்காக பல முறை சிறைத்தண்டனை அனுபவித்தவர் என்பது ஆவணங்கள் மூலம் தெரிகிறது.

