ஆய்வு, புத்தாக்கம், நிறுவனங்கள் ஆகியவற்றைக் கட்டியெழுப்பும் முயற்சிகளில் சிங்கப்பூர் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. இதனால் பல ஆண்டுகளாக நற்பலன்கள் ஏற்பட்டுள்ளன.
குறிப்பாக, உயிர்மருத்துவ அறிவியல் மற்றும் மருத்துவ தொழில்நுட்பத்தில் செய்த முத லீடுகளால் சிங்கப்பூரின் மொத்த உற்பத்தி நான்கு விழுக்காடு அதிகரித்து, 25,000க்கும் மேற்பட்ட வேலைகளை உருவாக்க ஆதரவாக இருந்துள்ளது.
நிறுவனங்கள் மீதான முதலீட்டு நிதியாதரவும் இருபது மடங்கு அதிகரித்துள்ளது. இதனால் சிங்கப்பூரின் புதிய பசுமை தொடர்பான தொழில்களும் தொடர்ந்து வளர்ச்சி காணும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கான முதலீடு, 2011ஆம் ஆண்டில் 500 மில்லியன் வெள்ளியாக இருந்தது. 2022ல் இது 11 பில்லியன் வெள்ளிக்கு அதி கரித்துள்ளது.
இந்தச் சாதனைகளை, பிரதமர் அலுவலகத்தின்கீழ் செயல்படும் தேசிய ஆய்வு நிறுவனம் நேற்று வெளியிட்ட தனது பிற்சேர்க்கையில் பட்டியலிட்டது.
நாடாளுமன்றத்தின் புதிய கூட்டத் தொடரில் அதிபர் ஹலிமா யாக்கோப் தொடக்க வுரையாற்றிய பிறகு அமைச்சுகளும் அரசாங்க அமைப்புகளும் பிற்சேர்க்கை அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றன.
கடந்த 2006ஆம் ஆண்டில் நாட்டின் ஆய்வு, உருவாக்கத்தை மேம்படுத்தி, அவை தொடர்பான கொள்கை, திட்டம், உத்திகளை வகுப்பதற்காக தேசிய ஆய்வு நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது.
பொருளியலுக்கு முக்கியத்துவம் அளிப்பது மட்டுமல்லாமல் சிங்கப்பூரின் சவால்மிக்க துறைகளான பொதுச் சுகாதாரம், மீள்திறன் வளங்கள் ஆகியவற்றை சமாளிக்கவும் ஆய்வு நிறுவனம் கைகொடுத்து வருவதாக அதன் தலைவரான துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் நேற்று தெரிவித்தார்.
கொவிட்-19 கொள்ளைநோயை எதிர்த்து உடனடியாகச் செயல்படுவதற்கு உயிர்மருத்துவ அறிவியல், தொற்றுநோய் ஆகியவற்றில் சிங்கப்பூருக்கு இருந்த ஆற்றல் உதவியதை அவர் உதாரணமாக சுட்டிக்காட்டினார்.
சோதனைச் சாலையில் கிருமியை உருவாக்கிய முதல் நாடுகளில் ஒன்றான சிங்கப்பூர், தொற்று நோயைக் கண்டறியும் சாதனங்களைத் தயாரித்தது. இவை உள்ளூரிலும் வெளிநாடுகளிலும் பயன்படுத்தப்பட்டன. உத்திபூர்வ தொழில்நுட்ப ஆற்றலை மேலும் பெருக்கி, நல்ல வேலைகளுக்கும் வளர்ச்சிக்கும் புதிய வாய்ப்புகளை உருவாக்கும் சிங்கப்பூரின் பொரு ளியல் மாற்றத்திற்கு தேசிய ஆய்வு நிறுவனம் தொடர்ந்து ஆதரவு அளிக்கும் என்றார்.

