கருணாநிதி துர்கா
பத்தாவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் விளையாட்டு உன்னத உபகாரச் சம்பளம், இவ் வாண்டு 11 விளையாட்டுகளைச் சேர்ந்த 33 புதிய விளையாட் டாளர்களை வரவேற்றுள்ளது.
அவர்களுடன் சேர்த்து இப் போதைக்கு 105 பேர் அந்த உன்னத உபகாரச் சம்பளம் பெற்று வருகின்றனர். கடந்த 2013ஆம் ஆண்டு அந்த உபகாரச் சம்பளத் திட்டம் தொடங்கப்பட்டது முதல், இது வரை 211 பேர் அதன்மூலம் பயன் அடைந்துள்ளனர்.
அவர்களில் 13 பேர் உலக சாதனையாளர்களாக உரு வெடுத்துள்ளனர்; 33 உலக வெற்றியாளர் பட்டங்கள் கை சேர்ந்துள்ளன.
தேசிய விளையாட்டரங்கில் நேற்று நடந்த விழாவில், முன் னாள், இந்நாள், புதிய பயனாளிகள் என 150க்கும் மேற்பட்டோரும் அவர்தம் குடும்பத்தினர், தேசிய விளையாட்டுச் சங்கங்களின் பிரதிநிதிகள், பங்காளி அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சரும் சட்ட இரண்டாம் அமைச்சருமான திரு எட்வின் டோங் நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.
"விளையாட்டாளர்கள் அனை வரும் தங்கள் விளையாட்டுகளில் தீவிரப் பற்றும் மிகுந்த அர்ப்பணிப்பும் கொண்டுள்ளனர். அவர்களின் கனவுகளுக்கு துணையாக இருக்கும் இது போன்ற உபகாரச் சம்பளத் திட்டங்கள் தொடர்ந்து செயல் பாட்டில் இருக்க வேண்டும்," என்று திரு எட்வின் டோங் கூறினார்.
ஆஸ்திரேலியப் பொதுவிருது திடல்தடப் போட்டியில் 200 மீட்டர் ஓட்டப் பந்தயத்தின் தகுதிச் சுற்றில் 22.89 நொடிகளில் ஓடி முடித்து, தேசிய சாதனை புரிந்த சாந்தி பெரேராவும் விளையாட்டு உன்னத உபகாரச் சம்பளம் பெற்றுவரும் விளையாட்டாளர்களில் ஒருவர். அதுமட்டுமல்லாது, ஒரே மாதத்தில் 100 மீட்டர் ஓட்டத்தில் மும்முறை அவர் தமது சொந்த தேசிய சாதனையை முறியடித்தது குறிப்பிடத்தக்கது.
"இந்த உபகாரச் சம்பளம் கிடைத்ததால் என்னால் எளிதாக ஒரு முழுநேர விளையாட்டாளராக, என் விளையாட்டிலும் லட்சியத்திலும் முழுக் கவனம் செலுத்த முடிகிறது. இனி வரும் போட்டிகளிலும் சிறப்பாகச் செயல்பட இத்திட்டம் சிறந்த ஆதரவாக அமையும்," என்றார் திருவாட்டி சாந்தி. அடுத்து வரும் தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளில் சிங்கப்பூருக்குப் பதக்கங்களை வென்று தருவதில் உறுதியாக உள்ளார் அவர்.

