பாசிர் ரிஸ் வட்டார சாலைச் சந்திப்பில் கடந்த திங்கட்கிழமை 'கோ அகெட் சிங்கப்பூர்' பேருந்து மோதியதில் 65 வயது சைக்கிளோட்டி உயிரிழந்தார்.
துப்புரவாளராகப் பணியாற்றிய அந்த ஆடவர் விபத்துக்குப் பிறகு சுயநினைவற்ற நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார்.
அங்கு சிகிச்சை பலனின்றி முதியவர் மாண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
பாசிர் ரிஸ் டிரைவ் 3க்கும் பாசிர் ரிஸ் சென்ட்ரலுக்கும் இடையிலான சாலைச் சந்திப்பில் ஏற்பட்ட விபத்து குறித்து திங்கட்கிழமை காலை 7.20 மணியளவில் தகவல் கிடைத்ததாகக் காவல்துறை கூறியது.
45 வயது பேருந்து ஓட்டுநர் விசாரணையில் உதவிவருவதாக அது குறிப்பிட்டது.
தன் கணவர் அன்றாடம் சைக்கிளில் வேலைக்குச் செல்வது வழக்கம் என்று மாண்டவரின் மனைவி சீனமொழி நாளேடான சாவ்பாவிடம் கூறினார். தொடக்கப்பள்ளி மூன்றாம் வகுப்பு வரை மட்டுமே பயின்ற ஆடவர், பல்வேறு வேலைகளில் கடினமாக உழைத்து தங்கள் மகனைப் பல்கலைக்கழகத்தில் படிக்க வைத்ததாக மனைவி குறிப்பிட்டார்.
சம்பவம் குறித்து வருத்தம் தெரிவித்த பேருந்து நிறுவனம், பாதிக்கப்பட்ட குடும்பத்துடன் தொடர்பில் இருப்பதாகக் கூறியது. விசாரணையில் அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாகவும் அது தெரிவித்தது.

