அமெரிக்காவும் சீனாவும் இரு தரப்பு உறவு மேலும் மோசமடைவதைத் தடுக்க பதற்றத்தைத் தணிக்கும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று சிங்கப்பூரின் மூத்த அமைச்சர் தர்மன் சண்முகரத்னம் வலியுறுத்தியுள்ளார்.
அப்படிச் செய்தால் உலகம் எதிர்நோக்கும் சவால்களை இரு சக்திவாய்ந்த நாடுகளும் ஒன்றிணைந்து சமாளிக்க முடியும் என்று அவர் கூறினார்.
பருவநிலை மாற்றம், தண்ணீர் நெருக்கடி போன்ற பிரச்சினைகளை அவர் உதாரணமாக சுட்டிக்காட்டினார்.
வாஷிங்டனில் நடைபெற்ற கருத்தரங்கில் அவர் பேசினார். இதில் வங்கி, நிதித் துறைகளின் தலைவர்கள், வர்த்தகப் பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
"அமெரிக்கா, சீனாவின் பங்கு இல்லாமல் பருவநிலை மாற்றம் போன்ற பொதுவானப் பிரச்சினைகளை நாங்கள் தீர்க்க முடியாது," என்று உலகப் பொருளியல் கருத் தரங்கில் திரு தர்மன் குறிப்பிட்டார். செய்தி இணையத்தளமான செமாஃபர் இந்தத் தொடக்க நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது.

