மோனலிசா
முதியவர் ஓட்டிச் சென்ற வாகனம் ஒன்று சிம்ஸ் டிரைவ் பகுதியில் உள்ள மூத்த குடிமக்கள் நிலையத்திற்குள் நுழைந்தது. நேற்று காலை 11.20 மணியளவில் அப்பகுதியின் புளோக் 44கில் நடைபெற்ற இச்சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக அந்த முதியவர் உயிர்தப்பினார்.
கட்டுப்பாட்டை இழந்த 77 வயது சீன ஆடவரின் ஆடி கார் முதலில் அங்கு நிறுத்தப்பட்டிருந்த மோட்டார்சைக்கிளில் மோதியது. பிறகு அருகில் இருந்த கொளம் ஆயர் சிம்ஸ் விஸ்டா மூத்த குடிமக்கள் நிலையத்தின் சுவரில் மோதியது.
மோதிய வேகத்தில் கார் கதவுகள் இறுகிக்கொண்டன. திறக்கமுடியாத நிலையில் 15 நிமிட போராட்டத்திற்கு பிறகு அருகிலிருந்தவர் உதவியுடன் முதியவர் மீட்கப்பட்டார்.
சம்பவம் நடந்த சிறிது நேரத்திற்குள் காவல் துறையினரும் அவசர உதவி வாகனமும் சம்பவ இடத்தை அடைந்தன. வாகனத்தின் உயிர்காக்கும் பாதுகாப்புக் காற்றுப்பையின் உதவியினால் முதியவருக்கு எவ்வித உடல் பாதிப்பும் ஏற்படவில்லை.
"காலை 11 மணியளவில் நான் குளித்துக்கொண்டிருந்ததேன். அப்போது பெரும் சத்தம் ஒன்று கேட்டது. விபத்தாக இருக்கவேண்டும் என்ற ஊகத்துடன் கீழே சென்று பார்த்த போது கார் ஒன்று மூத்த குடிமக்கள் நிலையத்தின் சுவரை இடித்த நிலையில் இருந்தது. அருகில் சிதைந்த நிலையில் மோட்டார்சைக்கிள் இருந்தது. முதியவர் ஓருவர் முதலுதவி சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தார்," என்று கொளம் ஆயர் சிம்ஸ் விஸ்டா குடியிருப்பாளர் குழுவின் துணைத் தலைவரான முகம்மது பிலால் கூறினார்.
அக்குழுவில் சுகாதார ஊழியராகவும் மேற்பார்வையாளராகவும் பணிபுரியும் ஹவ்லதெர் மாணிக், 33 "அந்த முதியவர் அந்த புளோக்கில்தான் வசிப்பவர். தனிப்பட்ட முறையில் பழக்கம் இல்லாதபோதும் அவரை அடிக்கடி பார்த்திருக்கிறேன். நல்லவேளையாக பாதிப்பு இன்றி உயிர் தப்பினார்," என்றார்.
சிம்ஸ் டிரைவ் பகுதியில் நேற்று காலை 11.20 மணியளவில் காரும் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார்சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானதாக தகவல் கிடைத்து என சிங்கப்பூர் காவல்துறை கூறியது. 11.25 மணியளவில் சாலை விபத்து குறித்து தகவல் வந்ததாகவும் ஒருவரை ராஃபிள்ஸ் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாகவும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது. முதியவர் சுயநினைவுடன் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார் என்றும் விசாரணை மேற்கோள்ளப்படுகிறது என்றும் காவல்துறை தமிழ்முரசிடம் தெரிவித்தது.
monolisa@sph.com.sg

