சிங்கப்பூரில் தமிழ்மொழியைக் கொண்டாடி வருகிறோம். அதுவும் இந்த ஏப்ரல் மாதத்தில் செழித்தோங்கும் தமிழ்மொழி விழாவில் 40க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளோடு திளைக்கிறோம்.
தேசிய நூலக வாரியம் உட்லண்ட்ஸ் நூலகத்தில் ஓராண்டுக்கும் முன் தமிழ்ச் சோலை எனும் பெயரில் ஒரு தமிழ்ப் பகுதியை அமைத்தது. தமிழ்ச் சோலையின் ஓராண்டு நிறைவு இன்று கொண்டாடப்படுகிறது.
சிங்கப்பூர் சுதந்திர நாடாகியதும் அன்றைய அரசியல் தலைவர்களும் சமூகத் தலைவர்களும் அதிகாரத்துவ மொழியாகத் தமிழையும் இணைத்து நம் தாய்மொழியை நிலைப்படுத்தினர்.
அதிகாரபூர்வ முறையில் நிலைபெற்றுவிட்ட தமிழை அதிகம் புழங்கும் மொழியாக அடுத்த தலைமுறைக்கும் அதற்கு அடுத்த அடுத்த தலைமுறைகளுக்கும் கொண்டு செல்லும் பொறுப்பு நமக்கு இருக்கிறது என்பதை தெள்ளத்தெளிவாக கவனத்தில் நிலைநிறுத்தி இப்போதைய மூத்த தலைமுறையினர் செயல்படுகிறார்கள்.
எதிர்காலத்தைப் பற்றிய சிந்தனை, அதற்கான திட்டம், தொலைநோக்குச் சிந்தனையுடன் ஆண்டுதோறும் ஏப்ரல் மாதத்தை மொழிக்காகவே ஒதுக்கி தமிழின் புழக்கத்தை அதிகப்படுத்த அவர்கள் வழி அமைத்துள்ளனர்.
இந்த மொழித் தொண்டை இன்று செய்து வரும் மூத்த சமூகத் தலைவர்கள் தமிழ்ப் பள்ளிகள் செயல்பாட்டில் இருந்த காலத்தில் வளர்ந்தவர்கள்.
அப்பள்ளிகளிலோ மற்ற பொதுப் பள்ளிகளிலோ படித்து வந்ததால் மொழி தொடர்பான ஆழமான கற்றல் பின்னணி அவர்களுக்கு வாய்த்தது. அவர்கள் தமிழ் சரளமாகப் பேசப்பட்ட சூழலில் வந்தவர்கள்.
அவர்களின் வீட்டில் தமிழ்ப் புழக்கம் இயல்பான ஒன்றாக இருந்தது.
ஆனால் இன்றைய பிள்ளைகளைக்கொண்ட தலைமுறை வேறுபட்ட சூழலில் வளர்ந்த ஒன்று. இவர்களில் பலர் வீட்டில் தமிழ் பேசுவதில்லை.
பலர் உயர்நிலைக் கல்வியை முடித்தவுடன் தமிழுடன் உள்ள உறவையும் துண்டித்துவிடுகின்றனர் போலும்.
சிலர் ஓரளவு தமிழ் பேசினாலும் தொடர்ந்து எழுதவோ, படிக்கவோ அவர்கள் முற்படுவதில்லை.
இத்தகைய நிலையில் உள்ள பெரும்பாலான பிள்ளைகளின் கல்விப் பயணம் முடிந்தவுடன் அவர்கள் தொடர்ந்து தமிழ் மொழியுடன் தொடர்பில் இருப்பதற்கான வாய்ப்புகளை சமூகம் உருவாக்கித் தரவேண்டும். தமிழைப் புழங்குவதற்கு உள்ள வாய்ப்புகள் பற்றி இளையர்களுக்கு எடுத்துச் சொல்லவேண்டும். மொழிப் பற்றை அவர்களிடம் வளர்க்க வேண்டும்.
தொழில்நுட்பத்தின் அதீத வளர்ச்சியின் விளைவாகக் கிடைத்துள்ள செயற்கை நுண்ணறிவு போன்றவை நம் வாழ்வின் இயக்கத்தையே மாற்றக்கூடியவை. மொழியின் புழக்கத்திற்கும் பயன்பாட்டிற்கும் அத்தகைய மாறுபட்ட வாழ்வியல் உருவாக்கும் சவால்கள் கணிசமாகவே இருக்கும்.
மனிதனின் உதவியே இல்லாமல் மனிதன் செய்யக்கூடியவற்றை இனி இயந்திரங்களே செய்யமுடியும் என்ற நிலை வரும். அத்தகைய இயந்திர யுகத்தில் மனிதத்தன்மையையும் பண்பாட்டையும் நிலைக்கச் செய்வது மேலும் அத்தியாவசியமான ஒன்றாக அமையும்.
உணர்வுகளையும் உணர்ச்சிகளை யும் இரண்டாம்பட்சமாக்கிவிட்டு, தேவையான பணியை ஆக்ககரமாக, துரிதமாக செய்யவேண்டும் என்பதில் ஒருமித்த கவனத்தைச் செலுத்துகின்ற, உற்பத்தித்திறனை, போட்டித்திறனை மையமாகக்கொண்ட வாழ்வே எதிர்காலத்தில் அமையலாம்.
அத்தகைய நிலையில் மனிதனாக நாம் வாழ்வதற்கும் பண்பாட்டுடன் விளங்குவதற்கும் நம் தாய்மொழியான தமிழ்மொழிதான் நமக்குக் கைகொடுக்கும் என்பதில் ஐயமில்லை.
இன்றைய வணிக யுகத்தில் வாழ்க்கைத்தொழில் வளர்ச்சியையும் வருமானத்தையும் நோக்கமாகக் கொண்டு வாழ்கிறோம். இதுவே சரியானதாக இருக்கலாம்.
ஆனால் அதற்காக தாய்மொழியைப் புறக்கணித்துவிட்டு அதை அடைய முற்படுவது என்பது, பத்தோடு பதினொன்று அத்தோடு இதுவும் ஒன்று என்ற வாழ்க்கையாகவே நம் வாழ்க்கை அமைந்துவிடும்.
நல்ல வேலை, நல்ல சம்பளம், வாழ்க்கை வசதிகள் என்று அவற்றை விரட்டிக்கொண்டே போகும் நாம், சராசரியாக நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாகவும் அவற்றை விரட்டிக் கொண்டேதான் இருப்போம்.
அந்தக் காலகட்டத்தில் தமிழ்மொழியை முற்றிலும் புழங்காமல் இருந்து பின்னர் ஓய்வுபெறும் காலத்திலோ பிற்காலத்திலோ நாடினால் அந்த மொழி கைகூடி வருமா?
ஒரு மொழியின் நிலை அதன் புழக்கத்தில்தான் உள்ளது. புழங்காமல் போனால் மெல்ல மெல்ல அது அழிந்துதான் போகும்.
அரசாங்கம் இன்றுவரை தமிழ் மொழிக்காக செலவிடும் வளங்கள் ஏராளம். இன்று வீதிகளில், ஊடகங்களில், நாடாளுமன்றத்தில், அரசாங்கத்தில், அரசாங்க அமைப்புகளில், நூலகங்களில் தமிழ் இருப்பதை அரசாங்கம் உறுதி செய்கிறது.
ஆனால் வீடுகளில் மட்டும் இன்னும் தமிழ் புழக்கத்தை அதிகரிக்க நம்மால் முடியவில்லை. ஏதாவது பெயர் பலகைகளில் தமிழ் மொழி இடம்பெறவில்லை என்றால் கொந்தளித்து எழுகிறோம்.
அதுபோல தமிழ் இல்லங்களில் தமிழ் ஒலிக்கச் செய்ய என்ன செய்யலாம்?
தமிழர் நடத்தும் கடைகளுக்கு முன்புபோல தமிழ்ப் பெயர்களைக் காணமுடிவதில்லை. தமிழ்க் குடும்பங்களில் பிறக்கும் குழந்தைகளுக்குத் தமிழ்ப் பெயர்கள் சூட்டுவதும் குறைந்துவிட்டது.
முந்தைய தலைமுறை நமக்கு விட்டுச்சென்றுள்ள தமிழ் மொழியை இளையர்கள் அடுத்த தலைமுறைக்குக் கொண்டுசெல்லவேண்டும். அதற்கு நம் முன்னோர்கள் ஏற்கெனவே எடுத்துள்ள முயற்சிகளைத் தொடர்ந்து மேலும் பெரும்பங்கை நாம் ஆற்றவேண்டும். அப்படிச் செய்யாவிடில் நாம் நம் தாய் மொழிக்கு இழைக்கும் துரோகமாக அது அமைந்துவிடும்.
எதிர்காலத் தலைமுறை நம்மைச் சபிக்கும் நிலை ஏற்படாமல் தமிழ்மொழியை நிலைக்கச் செய்யும் பொறுப்பை உணர்ந்து மொழிப் புழக்கத்தை நோக்கமாகக் கொண்டு தீவிரமாக செயல்பட உறுதிபூணுவோம்.
இர்ஷாத் முஹம்மது
செய்தி ஆசிரியர்

