சபிதா ஜெயகுமார்
முதன் முறையாக நோன்புப் பெருநாள் கொண்டாட்டங்களின் ஆயத்தப் பணிகளில் சமூகத்தின் வசதி குறைந்த குடும்பங்களுக்கு உதவி நல்கியுள்ளது சிண்டா எனும் சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கம்.
நோன்புப் பெருநாள் காலத்தின்போது இல்லாமையால் தவிப்பவர்களும் பண்டிகைக்கால இன்பங்களைப் பெற வேண்டும் என்ற மகத்தான நோக்கத்துடன் நேற்று 'புரோஜெக்ட் ஷைன்' வீட்டு மேம்பாட்டுப் பணிகளில் தொண்டூழியர்கள் ஈடுபட்டனர்.
2020ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட 'புரோஜெக்ட் ஷைன்' திட்டம், 50க்கும் மேலான தொண்டூழியர்கள், ஆதரவாளர்களின் துணையுடன் 18 வீடுகள் தீபாவளிக் கொண்டாட்டங்களுக்காக சுத்தப்படுத்தப்பட்டன.
கொவிட்-19 கிறுமித்தொற்று ஏற்படுத்திய ஈராண்டு இடைவேளைக்குப் பிறகு மீண்டும் தொடர்கிறது சிண்டாவின் இந்தச் சமூக முயற்சி. இவ்வாண்டு 'புரோஜெக்ட் ஷைன்' திட்டம் நோன்புப் பெருநாள், தீபாவளி, கிறிஸ்துமஸ் என மூன்று பண்டிகைகளையும் கொண்டாடும் குடும்பங்களுக்கு விரிவாக்கப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை என்றும் பாராமல் ஏறத்தாழ 60 தொண்டூழியர்கள் தீவு முழுவதும் சென்று கிட்டத்தட்ட 20 வீடுகளில் அழகூட்டும் பணிகளில் இறங்கினர்.
சிண்டா இளையர் மன்றம், சிண்டா அமைப்பு, இஷ்டாரா அறநிறுவனம் ஆகியவற்றைச் சேர்ந்த தொண்டூழியர்கள் இச்சமூக முயற்சிக்காகத் திரண்டனர். இஷ்டாரா அறநிறுவனம் சுத்தம் செய்யத் தேவைப்படும் பொருள்களை வழங்கி ஆதரவளித்தது.
"இந்தத் திட்டத்தின் மூலம் பண்டிகைக் காலத்தின்போது வீட்டின் முக்கிய அம்சமான சுத்தத்தை வசதி குறைந்த இல்லங்களுக்கு வழங்க முடிந்தது. எங்கள் முயற்சிகளுக்கு பல தரப்பினரிடமிருந்தும் ஆதரவு கிடைத்து வருகிறது," என்று கூறினார் சிண்டாவின் தலைமை நிர்வாக அதிகாரி திரு அன்பரசு ராஜேந்திரன்.

