தெளிவான வறுமைக்கோட்டை வரையறுத்தல், பாலர் பள்ளிக் கல்வியை கட்டாயமாக்குதல், வேலையில்லாதோருக்கான ஆதரவுத் திட்டம் ஆகியவை நேற்று நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளில் அடங்கும்.
அதிபர் உரை மீதான ஐந்து நாள் விவாதத்தைத் தொடங்கி வைத்து அவர்கள் பேசினர். திருவாட்டி ஹலிமா யாக்கோப் ஏப்ரல் 10ஆம் தேதி ஆற்றிய உரை, அரசாங்கத்திற்கான மற்ற முக்கிய முன்னுரிமைகளில் சமூக பாதுகாப்புக் கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியது.
இரு வார இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தொடங்கிய 14வது நாடாளுமன்றத்தின் இரண்டாவது அமர்வின் தொடக்கமாக அவரது உரை அமைந்தது.
சமூக ஆதரவை மேம்படுத்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்மொழிந்த நான்கு பரிந்துரைகள்:
அனைத்துக் குழந்தைகளும் பாலர்பள்ளிக்குச் செல்வதை உறுதிசெய்வது முக்கியம் என்று குறிப்பிட்ட செம்பவாங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான திரு விக்ரம் நாயர், பாலர்பள்ளிக் கல்வியை கட்டாயமாக்க வேண்டும் அல்லது எல்லாப் பிள்ளைகளும் பள்ளிக்குச் செல்வதை ஊக்குவிக்க வலுவான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று பரிந்துரைத்தார்.
வறுமைக்கோட்டை
வரையறுப்பது
சிங்கப்பூர் அதிகாரபூர்வ வறுமைக்கோட்டை வரையறுப்பதற்கான நேரம் இது என்று பேராசிரியர் ஜேமஸ் லிம் கூறினார். செங்காங் குழுத்தொகுதிக்கான பாட்டாளிக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினராக அவர், அது "வசிப்பிடம், உணவு, உடைகள் எனும் 'அடிப்படை' தேவைகளுக்கு அப்பாற்பட்ட கூறுகளின் அடிப்படையில் இருக்க வேண்டும் என்றார்.
இதைத் தீர்மானிக்க சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சின் பிரதிநிதிகள், பொது சமூகத் தலைவர்கள், கல்வியாளர்களைக் கொண்ட ஒரு குழு அமைக்கப்பட வேண்டும் என்றார் அவர்.
அரசாங்க உதவிக்கான அனைத்து வரம்புகளும், குறிப்பாக நிதி உதவித் திட்டமான காம்கேர், இந்த வறுமைக்கோட்டுக்கு அல்லது அதற்கும் மேல் உள்ளதாக இணைக்கப்பட வேண்டும். உள்ளூர் தகுதிச் சம்பளமும் (LQS) இதனுடன் இணைக்கப்பட வேண்டும். LQS என்பது வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு அமர்த்தும் நிறுவனங்களுக்கு மனிதவள அமைச்சு நிர்ணயித்துள்ள ஊதிய வரம்பு ஆகும்.
அத்தகைய நிறுவனங்கள் முழுநேர உள்நாட்டு ஊழியர்களுக்கு குறைந்தபட்சம் $1,400 வழங்க வேண்டும்.
தற்போதைய ஆதரவுத் திட்டங்கள் பல்வேறு வருமான வரம்புகளைக் கொண்டிருப்பதாக பேராசிரியர் லிம் குறிப்பிட்டார்.
பொது வாடகை குடியிருப்புகளுக்குத் தகுதிபெற அதிகபட்ச மாத வருமானம் $1,500 ஆகவும் அதே நேரத்தில் காம்கேர் பெறுவதற்கான வரம்பு கிட்டத்தட்ட $1,900 ஆகவும் உள்ளதாக அவர் சுட்டினார்.
வேலையில்லாதோருக்கான ஆதரவு
ஆட்குறைப்பு போன்ற காரணங்களால் வேலையின்றித் தவிக்கும் ஊழியர்களுக்கான ஆதரவுத் திட்டம் வேண்டும் என்றார் தெம்பனிஸ் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திரு டெஸ்மண்ட் சூ.
ஊழியரணியின் வேலை நெறிமுறைகளைப் பாதுகாக்கும் வகையில், பயிற்சி வேலை தேடல் உதவியுடன் இந்த ஆதரவை இணைக்கலாம் என்று அவர் தெரிவித்தார்.
"ஒருவர் எவ்வளவு காலம் வேலையின்றி இருக்கிறாரோ, அந்த அளவிற்கு அவருக்கான வேலைவாய்ப்புகள் குறையும்.
"எனவே, இந்த ஆதரவு அறிமுகப்படுத்தப்பட்டால், அது தனிநபர்கள் மீண்டும் ஊழியரணியில் சேர ஊக்குவிப்பு வழங்குவதாக இருக்க வேண்டும்," என்று அவர் கூறினார்.
பயிற்சியும் மறுதிறனும் நாட்டின் வேலை நெறிமுறையின் முக்கிய அம்சமாக இருந்தாலும், தொடர்ந்து அவ்வாறு செய்வது ஊழியர்களுக்கு மனச்சோர்வை ஏற்படுத்தக்கூடும். ஆனால், அவர்களால் வேலை பெற முடியாமல் போகலாம், குறிப்பாக வயதான ஊழியர்களால்.
இத்தகைய அபாயங்களை முற்றிலுமாக அகற்ற முடியாவிட்டாலும், அதிகமான வேலை நியமனம் - பயிற்சி திட்டங்கள் மூலம் இதை சமன்படுத்த முடியும் என்று திரு சூ கூறினார்.
பராமரிப்பாளருக்கு ஆதரவு
பராமரிப்பாளராகவும் இருக்கும் வேலை பார்க்கும் பெண்கள், தன்னுரிமை ஊழியர்கள், சிறப்புத் தேவையுள்ள பெரியவர்கள் ஆகிய மூன்று பிரிவினருக்கு ஆதரவு தேவை என்றார் பாசிர் ரிஸ்-பொங்கோல் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திருவாட்டி இயோ வான் லிங்.
ஊழியர்களுக்கான பராமரிப்பு விடுப்பு பரிசீலிக்கப்படலாம் என்றும், முடிந்தவரை முதலாளிகள் நீக்குப்போக்கான வேலை ஏற்பாடுகளை நீட்டிக்கலாம் என்றும் அவர் பரிந்துரைத்தார்.
இணையவழி ஊழியர்கள் எதிர்கொள்ளும் கண்ணுக்குத் தெரியாத அபாயங்களை சிங்கப்பூரர்கள் அவர்கள் சேவைகளைத் நாடும்பொது மனதில் கொள்ளும்படி கேட்டுக்கொண்டார்.
உணவு அல்லது பிற தளவாடத் தேவைகளை வழங்கும்போது இணையவழி ஊழியர்களுக்கு உடல் பாதுகாப்பிற்கு ஏற்படும் அபாயங்கள், அவர்களின் ஓய்வுக்கால சேமிப்பு, சுகாதார பாதுகாப்பு கட்டமைப்புகள், வீட்டுவசதி ஆகியவை பற்றி கருத்தில்கொள்ள வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.
சமூகத்தின் மற்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் சிறப்புத் தேவைகள் உள்ள பெரியவர்கள் பாதுகாப்பாகவும் கண்ணியமாகவும் வாழ்வதை உறுதிசெய்ய இன்னும் பலவற்றைச் செய்ய வேண்டும் என்றும் திருவாட்டி இயோ கூறினார்.

