ஒற்றை அளவைமுறையால் வெற்றியை வரையறுக்கக்கூடாது: அமைச்சர் சான் வலியுறுத்து
எதிர்காலச் சவால்களை எதிர்கொள்ளும் வகையில் பலதரப்பட்ட வலிமைகளுடன் கூடிய மீள்திறன்மிக்க சமுதாயத்தை சிங்கப்பூர் உருவாக்குவதில் நிலையான, குறுகிய அளவை முறை கொண்டு தனித்திறனையும் செயல்திறனையும் வரையறுப்பது உதவாது என்று கல்வி அமைச்சர் சான் சுன் சிங் (படம்) தெரிவித்துள்ளார்.
மாறாக, ஒற்றைத் தேர்வு அல்லது குறிப்பிட்ட தருணத்தைக் கொண்டு ஒருவரின் எதிர்கால வாழ்க்கையைத் தீர்மானிக்காத வகையில், தகுதிக்கு முன்னுரிமை அளிக்கும் தொடர்ச்சியான முறையை சிங்கப்பூர் கொண்டிருக்க வேண்டும் என்று அமைச்சர் சான் வலியுறுத்தினார்.
நாடாளுமன்றத்தில் அதிபர் உரைமீதான இரண்டாம் நாள் விவாதத்தின்போது, தகுதிக்கு முன்னுரிமையே சிங்கப்பூரின் சமூகப் பிணைப்பின் மையமாகத் திகழ்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.
பிறப்புரிமை, குடும்பத் தொடர்புகள் அல்லது மரபுவழிச் சொத்து அடிப்படையில் அல்லாது, ஒருவரது திறமையின்மூலம் முன்னேற அனுமதிக்க வேண்டும் என்றார் திரு சான்.
அதே நேரத்தில், சமுதாயச் சவால்களுக்குத் தகுதிக்கு முன்னுரிமையே முழுமையான தீர்வாக அமையாது என்றும் அவர் சொன்னார்.
ஒரேயொரு, நிலையான, குறுகிய அளவை மூலம் வெற்றியை வரையறுப்பது சமூகத்தைத் தேக்கமடையச் செய்துவிடும் என்றும் பொருத்தமில்லாமலும் ஆக்கிவிடும் என்றும் அமைச்சர் சான் குறிப்பிட்டார்.
"சமுதாயம் வளர்ச்சியடையும்போது, முன்னைய, நடப்பிலுள்ள அளவைமுறை மூலம் வெற்றிபெற்றவர்கள், சில நேரங்களில் அவர்களின் தனிப்பட்ட நலன்களையும் வசதியையும் பாதுகாக்கும் நோக்கில் அதே அளவுகோல்கள் நடப்பிலிருக்க வேண்டும் என விரும்பக்கூடும்," என்று அவர் கூறினார்.
ஒருகாலத்திய அளவைமுறையை மட்டும் பயன்படுத்தி நற்சான்றிதழ் வழங்கும் வலையில் சிக்கிவிடக்கூடாது என்று நிறுவனங்களுக்கும் சமுதாயத்திற்கும் திரு சான் வலியுறுத்தி இருக்கிறார்.
பின்னடைவுகளில் மீண்டெழ மக்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
வாழ்வில் வெற்றிபெற்ற தனிமனிதர்கள் தங்களுக்கென சமூக வட்டங்களை ஏற்படுத்திக்கொள்ளக்கூடும்; தங்கள் பிள்ளைகளுக்குச் சொத்து சேர்த்து வைத்துவிட்டுச் செல்லக்கூடும். அதனால், தகுதிக்கு முன்னுரிமை என்பது காலப்போக்கில் சமூகத்தில் பலஅடுக்கு நிலையை ஏற்படுத்திவிடக்கூடும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
அதனால், தகுதிக்கு முன்னுரிமை என்பது வசதி குறைந்தவர்களைப் பொறுத்தமட்டில் கடினமானதாகிவிடும் என்றார் அவர்.
மேலும், சமூகத்தின் பங்கைக் கணக்கில் கொள்ளாது, ஒருவரின் வெற்றிக்கு அவரது தனித்திறமையும் கடின உழைப்பும் மட்டுமே காரணம் என்று தவறான நம்பிக்கை ஏற்படக்கூடிய அபாயமும் உள்ளது என்றும் திரு சான் சொன்னார்.
தேர்வு முடிவுகள், தரப்புள்ளிகள் அல்லது பட்டக்கல்வி, பட்டயக்கல்விச் சான்றிதழ் என ஏதேனும் ஒற்றை அளவைமுறையை மட்டும் கொண்டு மக்களின் பலதரப்பட்ட திறன்களை மதிப்பிடும் முறையிலிருந்து விலக அரசாங்கம் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கும் என்று அவர் கூறினார்.
தகுதி அடிப்படையிலான நுழைவுச்சேர்க்கை போன்ற பரந்த வழிகளில் மாணவர்களின் தங்களின் கல்விப் பாதையைத் தேர்ந்தெடுக்கலாம் என்றார் அவர்.
வாழ்க்கைக்குத் தேவையான முக்கியத் திறன்களை மாணவர்கள் கற்றுக்கொள்ள ஏதுவாக பள்ளிகளில் காலமும் அதற்கான வெளியும் ஒதுக்கித் தரப்பட்டு வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.
வசதி குறைந்தவர்களைக் கைதூக்கிவிட அரசாங்கம் இன்னும் அதிகம் செய்யும் என்றும் அவர் சொன்னார்.

