தலைமுறைகளுக்கிடையே சமூக முன்னேற்றத்தைக் நிலைநிறுத்துதல், தேவையுள்ளவர்களைக் கைதூக்கிவிடுதல், எல்லாருடனும் சேர்ந்து அனைவரையும் உள்ளடக்கும் சமுதாயத்தை உருவாக்குதல் ஆகியவை குடும்பங்கள் தங்கள் சூழ்நிலைகளை மேம்படுத்தி, நல்ல எதிர்காலத்தை உண்டாக்க உதவும் என்று சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
அதிபரின் உரை மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் தமது அமைச்சின் திட்டங்களை அமைச்சர் விளக்கினார்.
அப்போது அவர், "சமூக முன்னேற்றம் என்பது உலக நாடுகளுக்கு சவால்மிக்கதாக உள்ளது. வளர்ந்த நாடுகளின் சமூகங்கள் ஊதிய தேக்கத்தைச் சந்தித்துக்கொண்டிருக்கின்றன. மற்ற நாடுகளில் உள்ள இளையர்கள், தங்கள் பெற்றோரைவிட தாங்கள் சிறப்பாக முன்னேற முடியும் என்றும் தங்கள் ஆசைகள் நிறைவேறப் போகின்றன என்றும் நம்புவதில்லை.
"ஒற்றுமையின்மையால் அவர்களின் சமூகம் பிளவு படுகிறது. அதனால் நாட்டில் நம்பிக்கை அற்றுப்போகிறது. அத்துடன் இன, சமய பிரச்சினைகள் தலையெடுக்கும்போது, சமூக முன்னேற்றம் என்பது முடியாத காரியமாகிறது. இதுபோன்ற ஒரு நிலையை நாம் ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது," என்று திரு மசகோஸ் விவரித்தார்.
சிஙகப்பூரைப் பொறுத்தவரை, சமூக முன்னேற்றம் என்பது தலைமுறைகளைத் தாண்டி உயிர்ப்புடன் இருக்கிறது. குடும்பங்களுக்கு எப்போதுமே வாய்ப்புகளும் பிள்ளைகளுக்கு சிறப்பான எதிர்காலமும் உருவாக்கப்படுவதை நோக்கமாகக் கொண்ட ஒரு நாடாக சிங்கப்பூரைப் பிரகாசிக்க செய்வதே நமது நோக்கம்.
இதன் அடிப்படையில். குறைந்த வருமான குடும்பங்களுக்கு உதவுவது குறித்த கொள்கைகளை அரசாங்கம் எவ்வாறு வலுப்படுத்த உள்ளது என்று அமைச்சர் பட்டியலிட்டார்.
தரமான, கட்டுப்படியாகக்கூடிய பாலர் பள்ளிகளைக் கட்டி, அதன் மூலம் பிள்ளைகளுக்கு வலுவான அடித்தளத்தை உருவாக்கி, ஒரு நல்ல வாழ்க்கைத் தொடக்கத்தை அமைத்துக்
கொடுப்பதில் அரசாங்கம் முதலீடு செய்துள்ளது.
'கிட்ஸ்டார்ட்' திட்டம் மூலம் தாய்மார்களுக்கும் பிள்ளைகளுக்கு அதிகப்படியான உதவிகளை வழங்கி வருகிறோம். 2016ல் அத்திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து இன்றுவரை 6,200க்கு மேற்பட்ட பிள்ளைகள் பயனடைந்துள்ளனர்.
குறைந்த வருமான குடும்பங்களுக்கு விரைவாகவும் எளிதாகவும் உதவி கிடைத்து, நிலைத்தன்மை, தற்சார்புநிலை, சமூக முன்னேற்றம் ஆகியவற்றை அடைய, வழங்கப்படும் சேவைகள் குடும்பங்களை மையமாகக் கொண்டும் எளிதில் கிடைக்கக்கூடியதாக இருப்பதையும் அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும் என்றும் அமைச்சர் சொன்னார்.
"ஒரு மேம்பட்ட எதிர்காலத்தை உருவாக்கிக்கொள்ள பல குடும்பங்கள் துடிப்பான வழிகளை மேற்கொண்டு வருகின்றன. முன்னேறும் சிங்கப்பூர் கருத்தறியும் நிகழ்வுகளின்போது, குடும்பங்களின் தற்சார்புநிலை பாதிக்காத வகையில் அரசாங்கம் அப்படிப்பட்ட குடும்பங்களுக்கு ஊக்கமளிக்க வேண்டும் என்று சிலர் யோசனை கூறினர்.
"சிங்கப்பூரில் சமூகங்களை முன்னேற்றும் பணியில் மேலும் பல பங்காளிகள் சேர்ந்துகொள்ளலாம்," என்று கூறிய அமைச்சர், சமூக சேவை அமைப்புகளைத் தவிர வர்த்தகங்கள், அக்கம்பக்கத்தார், சமூக பங்காளிகள் முதலியோரும் அவர்களில் அடங்குவர் என்றார்.
"சமூக முன்னேற்றத்தை எட்டி, அதில் சாதிக்க வேண்டுமானால் அதை அரசாங்கத்தால் மட்டும் செய்ய முடியாது. அனைத்துத் தரப்பினரும் ஒன்றுசேர்ந்து பங்களித்தால்தான் அதைச் சாதிக்க முடியும்," என்றும் திரு மசகோஸ் தமது தரையில் வலியுறுத்திக் கூறினார்.

