நாடாளுமன்ற நடைமுறைகளையும் விதிகளையும் மீறியதற்காக தொகுதியில்லாத நாடாளுமன்ற லியோங் மன் வாய் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என்று நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
கெப்பல் ஆஃப்ஷோர் அண்ட் மரின் நிறுவனத்தின் ஊழல் வழக்கு தொடர்பில், கடந்த மாதம் நடைபெற்ற நாடாளுமன்றக் கூட்டத்தின்போது, சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகத்துக்கும் திரு லியோங்குக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் இடம்பெற்றது. அவ்விவாதத்தின்போது தான் முன்வைத்த குற்றச்சாட்டைத் திரும்ப பெறுவதாக திரு லியோங், அதற்கு அடுத்த நாள் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்தார்.
அதே வாக்குவாதத்தின்போது, சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியின் தலைமைச் செயலாளரான திரு லியோங், நாடாளுமன்ற நாயகர் டான் சுவான் ஜின்னைப் பார்த்து, "அமைச்சர் என்னிடம் அந்தக் கேள்வியைக் கேட்கவில்லை என்றால் நீங்களும் என்னிடம் கேட்கக்கூடாது," என்றார். பின்னர் அதன் தொடர்பில் திரு லியோங், திரு டானிடம் மன்னிப்பு கேட்டார்.
இதன் தொடர்பில் நேற்று மன்றத்தில் பேசிய நாடாளுமன்ற அவைத் தலைவர் இந்திராணி ராஜா, "திரு லியோங் மன்னிப்பு கேட்டுக்கொண்டதாலும் தான் முன்வைத்த குற்றச்சாட்டை திரும்ப பெற்றுக்கொண்டதாலும் அமைச்சர்கள் மீது அவநம்பிக்கையை ஏற்படுத்த தாம் ஒருபோதும் எண்ணியதில்லை என்று தெளிவுபடுத்தியதாலும் நாடாளுமன்றத்தில் அவ்வாறு நடந்துகொண்டது தவறு என்று ஒப்புக்கொண்டதாலும், இந்த விவகாரத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியதில்லை என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது," என்று தெரிவித்தார்.
திரு லீ சியன் யாங், திருமதி லீ சுவெட் ஃபெர்ன் தொடர்பான வழக்கில் அமைச்சர் சண்முகம், முன்னாள் பணிப்பெண் பார்தி லியானி வழக்கை உதாரணம் காட்டி பேசியது, நீரில் சேற்றைக் கலப்பது போன்றது என்று தாம் முன்வைத்த குற்றச்சாட்டுப் பதிவையும் திரு லியோங் அகற்றினார்.
மேலும் அமைச்சர் சண்முகமும் மூத்த அமைச்சர் டியோ சீ ஹியனும் குற்றவியல் நடைமுறைகளுக்கு நியாயம் கற்பிக்க நாடாளுமன்றத்தை ஒரு தளமாகப் பயன்படுத்துகின்றனர் என்று என்ற குற்றம் சாட்டுவதைப் போன்ற பதிவையும் திரு லியோங் ஃபேஸ்புக்கிலிருந்து அகற்றினார்.
14வது நாடாளுமன்றத்தின் இரண்டாம் கூட்டத் தொடர் தொடங்கியுள்ள வேளையில், உறுப்பினர்கள் மன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் நாடாளுமன்ற விதிமுறைகளுக்கு உட்பட்டு நடந்துகொள்ளுமாறு அவைத் தலைவர் என்ற முறையில் குமாரி இந்திராணி கேட்டுக்கொண்டார்.

