தங்களது பரிந்துரைகள் பெரும்பான்மை மக்களைத் திருப்திப்படுத்தும் விதத்தில் இருப்பதாகவும் அதில் சில சமரசங்களுக்கு இடமளித்துள்ளதாகவும் அரசாங்கம் கூறுவதை எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று நிராகரித்தனர்.
பாட்டாளிக் கட்சி எப்போதுமே மாற்றுக் கொள்கைகளை தங்கள் தேர்தல் அறிக்கையில் கூறிவந்துள்ளது, அதையே கடைப்பிடித்து வந்துள்ளது. ஆனால், ஆளும் மக்கள் செயல் கட்சியோ அதன் உறுதிமொழிகளுக்கு மாறாக நடந்துகொள்கிறது.
குறிப்பாக சொல்லப்போனால், அது நடைமுறைப்படுத்த நினைக்கும் பணிநீக்கக் காப்பீட்டுத் திட்டம் என்று அல்ஜுனிட் குழுத் தொகுதியின் பாட்டாளிக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் லியோன் பெரேரா கூறினார்.
"இது பற்றி துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங்குக்கும் மக்கள் செயல் கட்சிக்கும் தெரியும். நமது அரசியல் விவாதங்களை நேர்மையாக எதிர்கொள்வோம். அதை விடுத்து பேச்சுத் திறமையால் எதிர்த்தரப்பினரை ஒதுக்கித் தள்ளவேண்டாம்," என்று திரு பெரேரா கேட்டுக்கொண்டார்.
துணைப் பிரதமர் வோங் நேற்று முன்தினம் மன்றத்தில் உரையாற்றிபோது, எதிர்கட்சிகள் சிறப்பான மாற்றுக்கொள்களையும் யோசனைகளையும் கூற வேண்டும். மாறாக, மாற்றுக்கருத்து என்ற போர்வையில் அரசாங்கத்தின் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை சிறிது சிறிதாக குறைக்க முற்பட வேண்டாம் என்று தெரிவித்ததற்கு, திரு பெரேரா தமது கட்சி சார்பில் பதிலளித்தார்.
"எடுத்த எடுப்பிலேயே எதிர்த்தரப்பை நேர்மையற்றது என்று முத்திரையிடுவதற்குப் பதிலாக, ஏன் எங்கள் பரிந்துரைகள் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை என்ற காரணத்தை விளக்குவதில் கவனம் செலுத்த வேண்டும்," என்றார் திரு பெரேரா.
"நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்கட்சியினர் உட்பட ஒருவர் மற்றவரின் கருத்துகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும் அதில் உண்மை இருந்தால் அதை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் இருக்க வேண்டும். மாறாக, ஒட்டுமொத்தமாக எதிர்கட்சிகள் நேர்மையற்றவை என்று வகைப்படுத்துவது நியாயமற்றது.
"இப்படிப்பட்ட நியாயமற்ற வகைப்படுத்துதலால் மாற்றுக் கருத்துகள் மிரட்டல் விடுப்பதாக எடுத்துக்கொள்ளப்படுமானால், அது ஆரோக்கியமான விவாதத்துக்குத் தடையாக இருக்கும்," என்று திரு பெரேரா, விவரித்தார்.

