மோனலிசா
வெள்ளை நிற திரைச்சீலைகளாலும் மலர்களாலும் அலங்கரிக்கப்பட்ட கூடத்தின் நடுவில் தெய்வீக சாயலில் புன்னகை பூத்தது ரயனின் புகைப்படம். அதற்குப் பின்னால் இருந்த சவப்பெட்டியினுள் கலைக்கமுடியாத நிரந்தர நித்திரையில் இருந்தார் அண்மையில் உபின் தீவின் குவாரி ஒன்றில் காணாமல்போன தீயணைப்பு வீரரான 22 வயது ரயன் சபாபதி.
தெம்பனிஸ் தீயணைப்பு நிலையத்தில் முழுநேர தேசிய சேவையாளராக சேவையாற்றி வந்த ரயன் கடந்த வெள்ளிக்கிழமை நண்பர்களுடன் ஒருநாள் சுற்றுலாவாக உபின் தீவிற்குச் சென்றபோது காணாமல் போனார். தீயணைப்பு வீரர் காணாமல்போன சமயத்தில் அவர் பணியில் இல்லை.
சனிக்கிழமை அதிகாலை 12.33 மணிக்கு சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் உதவியை நாடியதையடுத்து அதிகாரிகள் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். பின்னர் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 16) பிற்பகல் 1 மணியளவில் கெக்கெக் குவாரியிலிருந்து ரயனின் சடலம் மீட்கப்பட்டது. முதல்கட்ட விசாரணையின் முடிவில் இவரின் மரணத்தில் சூது இருப்பதாகத் தெரியவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த ஓராண்டுக்கும் மேலாக ரயனின் மேலதிகாரியாகவும் உற்ற நண்பராகவும் இருந்த அஹ்மத் அப்துல்லா, 19, "சென்ற வாரம் சமூக நிகழ்வு ஒன்றில் நாங்கள் இருவரும் தொண்டூழியராக கலந்துகொண்டோம். மிகுந்த உற்சாகத்துடன் காணப்பட்ட அவரை நான் காண்பது அதுவே கடைசி முறையாக இருக்கும் என அப்போது எனக்குத் தெரியாது," என்று கண்களில் நீர்பெருகக் கூறினார் திரு அஹ்மத்.
அனைவரிடத்திலும் இன்முகத்துடன் பழகக்கூடிய ரயன் கோபப்பட்டு தான் கண்டதில்லை என்றும் பணியில் அழுத்தமும் பிரச்சினைகளும் ஏற்படும் சூழலில்கூட நிதானமாகவும் தெளிவுடனும் முடிவெடுத்து செயல்படக்கூடியவர் என்றும் திரு அஹ்மத் கூறினார்.
"என் மனதில் தாங்க முடியாத துக்கமும் நிறைய கேள்விகளும் இருக்கின்றன. இத்தகைய துயரைச் சந்திக்கும் அளவிற்கு நான் என் வாழ்வில் யாருக்கு என்ன தீங்கு இழைத்தேன். இப்போதைக்கு ஒரு தாயாக என் மகனின் இறுதிச்சடங்கை நன்முறையில் நடத்துவதிலே நான் கவனம் செலுத்த வேண்டும். அதன் பிறகு தனிமையிலே இறைவனிடத்தில் என் கேள்விக்கான பதில்களைத் தேடுவேன்," என்று கூறும்போதே உடைந்து அழுதார் ரயனின் தாயார்.
ரயனிற்கு விலங்குகள் மீது அலாதிப் பிரியம் உண்டு. தன்னுடைய செல்லப்பிராணியான பூனையுடன் அதிக நேரம் செலவிடுவார். மனிதர்களைப் போலவே விலங்குகளுக்கும் மரங்களுக்கும் கூட இவ்வுலகில் வாழ சமவுரிமை உண்டு என்று கூறிய ரயன், விரைவில் இன்னொரு பூனையை வளர்க்க இருந்ததாகவும் கனத்த இதயத்துடன் நினைவுகளைப் பகிர்ந்தார் ரயானின் தாயார்.
இளம் வயதிலிருந்தே துடிப்புடன் காணப்பட்ட ரயனிற்கு வீர தீர சாகசங்கள் மீது அதிக ஈடுபாடு இருந்ததாகவும் ஸ்கேட்டிங், நீச்சல் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் பெற்றிருந்ததாகவும் அவரின் தாயார் குறிப்பிட்டார். மேலும் தீயணைப்புத் துறையில் வேலை பார்ப்பதை அவர் பெருமிதமாகக் கருதினார் என்றும் அவரின் தாயார் கூறினார்.
ரயன் கித்தார் வாசிக்கும் கலைஞர் ஆவார். தானே மெட்டுஅமைத்து பாடல்வரிகள் இயற்றி பாடும் திறமை படைத்தவர். எத்தனையோ இரவுகள் ரயனுடன் பல நீண்ட உரையாடல்களின்போது அவர் கித்தார் வாசித்து பாடல்கள் பாடிய தருணங்களையும் அவருடைய நண்பர்கள் நினைவுகூர்ந்தனர்.
எதிர்காலத்தில் ஒரு சிறந்த இசைக் கலைஞராக உருவெடுக்க வேண்டும் என்ற வேட்கையும் இசையின் ஆளுமையை உலகமறியச் செய்யும் ஒரு சிறு கருவியாக தான் இருக்க வேண்டும் என்ற எண்ணமும் ரயனிற்கு இருந்ததாகவும் அவருடைய உறவினர் ஒருவர் தெரிவித்தார்.
ரயனின் இறுதிச்சடங்கு இன்று (புதன்கிழமை) மதியம் 3 மணிக்கு அவருடைய இல்லத்தில் தொடங்கி 4.30 மணிக்கு அவருடைய நல்லுடல் சுவா சூ காங் இடுகாட்டில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளதாக குடும்பத்தார் தெரிவித்தனர்.

