பல்வேறு வழிகள் மூலம் மக்கள் தங்களது கைப்பேசித் தரவுகளை விட்டுக்கொடுக்கும் அபாயம் நிலவுகிறது.
சட்டவிரோதமாக மாற்றியமைக்கப்பட்ட மின்னூட்ட முனைகள், யுஎஸ்பி கம்பிவடங்கள் மூலம் தரவுகள் களவாடப்படலாம்.
சிங்கப்பூர் இணையப் பாதுகாப்பு அமைப்பும் காவல்துறையும் நேற்று முன்தினம் வெளியிட்ட கூட்டு ஆலோசனை அறிக்கையில் இதனைத் தெரிவித்தன.
தரவுகள் பறிபோவது அல்லது கைப்பேசிகளில் தீங்குநிரல் (malware) செலுத்தப்படுவதற்கான நான்கு வழிகளை அவை கோடிட்டுக் காட்டின.
மோசடி 'வைஃபை' இணைய வசதிகளுடன் கையடக்கச் சாதனங்கள் இணையும்போதும் சாதனத்தின் கோப்புப் பகிர்வு செயல்பாடுகள் பாதுகாக்கப்படாதபோதும் புளூடூத் இணைப்புமற்றும் 'ஜூஸ் ஜேக்கிங்' முறை மூலம் தரவுகள் களவாடப்படலாம்.
கையடக்கச் சாதனங்களில் தீங்குநிரலைச் செலுத்த அல்லது தரவுகளைத் திருட, மின்னூட்ட முனைகள் அல்லது யுஎஸ்பி கம்பிவடங்களை இணையக் குற்றவாளிகள் சட்டவிரோதமாக மாற்றியமைப்பதை 'ஜூஸ் ஜேக்கிங்' குறிக்கிறது.
விமான நிலையங்கள், கடைத்தொகுதிகள், ஹோட்டல்களில் மின்னூட்ட முனைகளைப் பயன்படுத்த வேண்டாம் என ஏப்ரல் 6ஆம் தேதி அமெரிக்காவின் மத்திய புலனாய்வுத் துறை பயனீட்டாளர்களிடம் கேட்டுக்கொண்டது.
பொது மின்னூட்ட நிலையமாக இருக்கட்டும், பொது 'வைஃபை' வசதியாக இருக்கட்டும், கையடக்கச் சாதனத்தில் தீங்குநிரலைச் செலுத்தும் ஆபத்து எப்போதும் உள்ளதாக 'பாலோ ஆல்டோ நெட்வொர்க்ஸ்' துணைத் தலைவர் ஷான் டுக்கா கூறினார்.
தங்களது சாதனங்களை இணைக்கும்போது பயனீட்டாளர்கள் எப்போதும் கவனமாக இருக்க வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார்.
பொது இடங்களில் சாதனங்களை மின்னூட்டம் செய்வதற்கு முன்பு, தானியக்க முறையில் கோப்புகளை மாற்றிவிடும் வசதியை நிறுத்திவைத்து, சாதனங்களை அணைத்துவிட பயனீட்டாளர்கள் ஊக்குவிக்கப்படுகின்றனர்.
'ஆன்டிவைரஸ்' மென்பொருள்களை நிறுவுவது, அதிகாரபூர்வ முறையில் செயலிகளைப் பதிவிறக்கம் செய்வது, வலுவான மறைச்சொற்களைப் பயன்படுத்துவது, நம்பகமான மூலங்களில் இருந்து வரும் இணைப்புகளை மட்டும் சொடுக்குவது உள்ளிட்டவை இதர நடைமுறைகளாகும்.

