சிங்கப்பூரின் நீடித்த நிலைத்தன்மையை உறுதிசெய்வது குறித்து அமைச்சர் கிரேஸ் ஃபூ
பருவநிலை மாற்றத்தின் தாக்கத்தைத் தணிக்கும் வகையில் சிங்கப்பூர் அதன் உள்கட்டமைப்பில் நீண்டகால அடிப்படையிலான முதலீடுகளைச் செய்துவருகிறது. அதேவேளையில் உணவுப் பாதுகாப்பிலும் அது கவனம் செலுத்துகிறது.
வருங்காலத் தலைமுறையினருக்கு நிதி வளங்களை ஒதுக்குவதற்கு தற்கால சிங்கப்பூரர்கள் மேற்கொள்ளும் முயற்சிகளை இவை பிரதிபலிக்கின்றன என்று நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூ கூறியுள்ளார்.
இதுவே தலைமுறைகளுக்கு இடையிலான சமூக இணக்கம் எனும் கோட்பாடு என்று நாடாளுமன்றத்தில் நேற்று அவர் கூறினார்.
சிங்கப்பூர், வருங்காலத் தலைமுறையினருக்கு நீடித்த நிலைத்தன்மையுள்ள இடமாக விளங்குவதை உறுதிசெய்ய, நாட்டின் சமூக இணக்கத்தை மூன்று அம்சங்களில் வலுப்படுத்த வேண்டியது அவசியம் என்றார் அமைச்சர்.
முதலாவது, மற்றவர் நலனுக்காக ஒவ்வொரு தனிமனிதரும் கொண்டிருக்க வேண்டிய கடமைகளும் பொறுப்புகளும்.
இரண்டாவது, சமூகத்தின் சிக்கலான பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண இணைந்து பணியாற்றுவதில் பல்வேறு குழுக்களின் பங்கு.
மூன்றாவது, வருங்காலத் தலைமுறையினருக்கு தற்போதுள்ளவர்கள் வளங்களை ஒதுக்குதல் என்றார் அமைச்சர்.
"பருவநிலை மாற்றத்தின் முழுத் தாக்கத்தையும் நாம் உணரப் போவதில்லை என்றபோதும் அடுத்தடுத்த தலைமுறையினரின் ஒளிமயமான வருங்காலத்தை உறுதிசெய்ய நாம் முதலீடு செய்ய வேண்டியது அவசியம் என்பது தெளிவாகிறது.
"எடுத்துக்காட்டாக, 2100ஆம் ஆண்டில் கடல் மட்டம் ஐந்து மில்லிமீட்டர் உயரக்கூடும். இத்தகைய அச்சுறுத்தலைச் சமாளிக்க சிங்கப்பூர் $100 பில்லியன் வரை முதலீடு செய்ய வேண்டும்," என்றார் அவர்.
கடற்கரைப் பாதுகாப்பு தொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தடுப்புகள் அமைப்பது முதல் வடிகால் உள்கட்டமைப்பு அமைத்தல் வரை பல்வேறு தீர்வுகள் கடல்மட்ட உயர்விலிருந்து நாட்டைப் பாதுகாக்கத் தேவைப்படும் என்றார் அமைச்சர்.
2030ஆம் ஆண்டுக்குள் சிங்கப்பூரின் உணவுத் தேவையில் 30 விழுக்காட்டை உள்ளூரில் உற்பத்தி செய்வது எனும் திட்டம் வருங்காலத் தலைமுறையினருக்கான நமது கடப்பாடு என்று கூறிய அமைச்சர் ஃபூ, உள்ளூர் உணவுத் தயாரிப்பு அதிகரிக்கும்போது வாடிக்கையாளர்கள் அவற்றுக்கு ஆதரவு தர முன்வரவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
வளங்களை மேலும் சிறப்பான முறையில் பயன்படுத்தும் பொருட்டு சிங்கப்பூரர்கள் ஒருமுறை பயன்படுத்தியபின் தூக்கி வீசும் பழக்கத்தை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று அமைச்சர் வலியுறுத்தினார்.

