பசுமை நிதித் திட்டத்தை சிங்கப்பூர் நாணய ஆணையம் விரிவுபடுத்துகிறது
சிங்கப்பூர், கரிமக் கழிவற்ற பொருளியலை விரைவில் சாதிக்க விரும்புகிறது. இதற்கு ஏதுவாக அது தன்னுடைய ஒருமித்த கவனத்தை விரிவுபடுத்துகிறது.
சிங்கப்பூர் இப்போது பசுமை நிதி வளத்தில் முக்கிய கவனம் செலுத்துகிறது. இனி அது நிறுவன உருமாற்றத்திற்கு நிதி அளிப்பதிலும் கவனம் செலுத்தவிருக்கிறது.
தெள்ளத்தெளிவான வரையறைகளைத் தீர்மானிப்பது, புத்தாக்கத்திற்கு ஊக்கமூட்டுவது, மானியங்களை விரிவுபடுத்துவது ஆகியவற்றை உள்ளடக்கி பசுமை நிதித் திட்டம் விரிவுபடுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
சிங்கப்பூர் நாணய ஆணையத்தின் கரிமக் கழிவற்ற செயல் திட்டத்திற்கான புதிய நிதிவளம் வழியாக இவை சாதிக்கப்படும்.
உருமாற்ற நிதியுதவி என்பது ஒரு வகை நிதி ஆதரவாகும். அது அதிக கரிமக் கழிவை உருவாக்கக்கூடிய நிறுவனங்கள் நீண்டகால முயற்சிகளின் மூலம் சுற்றுச்சூழலுக்கு உகந்த நிறுவனங்களாக மாற ஆதரவளிக்கும்.
பசுமைத் திட்டங்களுக்கு நிதி வழங்கும் உலக மையமாக சிங்கப்பூர் திகழ வேண்டும் என்பது இலக்கு. இதனையொட்டி பசுமை நிதித் திட்டம் என்ற ஒரு திட்டத்தை ஆணையம் 2019ல் தொடங்கியது.
அந்தத் திட்டம் இப்போது விரிவுபடுத்தப்படுகிறது. அதன்படி, எந்தெந்த நடவடிக்கைகள் பசுமை செயல்களாக, உருமாற்றத்தில் உள்ள நடவடிக்கைகளாகக் கருதப்படும் என்பதற்குத் தெள்ளத்தெளிவான வரைமுறைகள் தேவைப்படும் என்று துணைப் பிரதமரும் நிதி அமைச்சருமான லாரன்ஸ் வோங் தெரிவித்தார்.
சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் சுற்றுச்சூழல் பசுமை நிதிப் பயிலகம் என்ற அமைப்பை அதிகாரபூர்வமாகத் தொடங்கி வைத்து நேற்று திரு வோங் உரையாற்றினார்.
மொத்தமாகப் பார்க்கையில், உலக பசுமைக்கூட வாயு வெளியாக்கத்தில் சுமார் பாதி அளவுக்கு ஆசிய நாடுகள் காரணமாக உள்ளன.
அதே நேரத்தில் உலகில் இந்தப் பகுதியில் வசிக்கக்கூடிய மக்களில் மில்லியன் கணக்கா னோருக்கு மின் வசதியோ, நவீன கழிவு அகற்றும் வசதிகளோ, குடிநீர் வசதியோ இல்லை.
இது ஒரு பெரிய சவாலாக இருக்கிறது என்று திரு வோங் தெரிவித்தார். இந்த வட்டார மக்களுக்குத் தேவைகள் அதிகரித்து வருகின்றன.
அவற்றை நிறைவேற்றும் வகையில் அதிக எரிசக்தி தேவைப்படும் என்று திரு வோங் குறிப்பிட்டார்.

