புற்றுநோய் சிகிச்சை தொடர்பான செலவுகள் அதிகரித்தால்...
சிங்கப்பூரில் புற்றுநோய் சிகிச்சையின் செலவு அதிகரித்துக் கொண்டே போனால், அரசாங்கம் தலையிட்டு தனியார் மருத்துவ காப்புறுதித் திட்டங்களை முறைப்படுத்த வேண்டியிருக்கும்.
புற்றுநோய் சிகிச்சைக்காகும் அளவுக்கு மீறிய கூடுதல் மருந்துவச் செலவுகளை ஏற்கும் வண்ணம் காப்புறுதித் திட்டங்களின் வரம்பு உயர்த்தப்படுவது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் கவலை தெரிவித்த நிலையில் சுகாதார அமைச்சர் ஓங் யி காங் நேற்று மேற்கண்டவாறு கூறினார்.
இதில் தேவைப்பட்டால், சுகாதார அமைச்சும், காப்புறுதி நிறுவனங்களை முறைப்படுத்தும் சிங்கப்பூர் நாணய ஆணையமும் தலையிட்டு ஒருங்கிணைந்த காப்புறுதித் திட்டங்களும் அதில் கூடுதல் செலவுகளுக்கு வழிவகுக்கும் பிரிவுகளையும் முறைப்படுத்த மேலும் நடவடிக்கைகளை எடுக்கும் என்று அவர் விளக்கினார். இதன் தொடர்ச்சியாக, புற்றுநோய் மருந்துச் செலவுகளையும் அவற்றைக் காப்புறுதித் திட்டங்கள் எந்த அளவுக்கு ஏற்கின்றன என்பதையும் தமது அமைச்சு கூர்ந்து கவனித்து வருவதாக அவர் தெரிவித்தார்.
புற்றுநோய் சிகிச்சையில் உயர் வரம்பு காப்புறுதி எந்த அளவுக்கு புற்றுநோய் சிகிச்சைக்கு ஆகும் செலவை அரசாங்கம் குறைக்க எண்ணும் முயற்சியை பாதிக்கும் என இயோ சூ காங் நாடாளுமன்ற உறுப்பினர் யிப் ஹோன் வெங் வினவினார்.
புற்றுநோய் சிகிச்சையில் தனியார் காப்புறுதி நிறுவனங்கள் தங்களது ஒருங்கிணைந்த காப்புறுதித் திட்டங்களின்கீழ் வழங்கும் காப்புறுதி அளவில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன.
இதனால், தனியார் காப்புறுதி நிறுவனங்கள், சுகாதார அமைச்சு தயாரித்த புற்றுநோய் மருந்துப் பட்டியலில் உள்ள மருந்துகளின் செலவை மட்டுமே அவை ஏற்றுக் கொள்ளலாம்.
அத்துடன் அவை ஏற்றுக்கொள்ளும் செலவுக்கு வரம்பு விதிக்கப்பட்டுள்ளது. அமைச்சின் புற்றுநோய் மருந்துப் பட்டியல் கடந்த 2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியிடப்பட்டது என்பது இங்கு நினைவுகூரத்தக்கது.
காப்புறுதித் திட்டங்களில் கூடுதல் செலவுகளை ஏற்றுக்கொள்ளும் பிரிவுகள் ஒரு நோயாளியின் மருத்துவ செல வில், ஒருங்கிணைந்த காப்புறு தித் திட்டத்தின்கீழ் வராத, கூடுதல் செலவுகளின் பெரும்பகுதியை ஏற்றுக்கொள்வதற்காக உருவாக்கப்பட்டது.
ஆனால், வாடிக்கையாளர் ஒருவருக்கு வரம்பில்லாத வகையில் காப்புறுதி வழங்கும் நோக்கில் பல காப்புறுதி நிறுவனங்கள் புற்றுநோய் சிகிச்சைக்கு ஆகக்கூடிய எந்தவிதமான செலவையும் ஏற்றுக்கொள்ளும் வகையில் தங்கள் காப்புறுதித் திட்டங்களை அமைத்தன.
இதில் சுகாதார அமைச்சின் புற்றுநோய் பட்டியலின்கீழ் வராத மருந்துகளுக்கு ஆகும் செலவும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

