அடுத்த மாதம் 8ஆம் தேதி பொதுமக்களுக்காக திறந்துவிடப்படும் மண்டாயில் உள்ள 17 ஹெக்டர் நிலப்பரப்பு கொண்ட பறவைகள் மகிழ்வனம், நேற்று நடைபெற்ற ஊடக முன்னோட்டத்தின் அதன் முதல் பகுதி வருகையாளர்களை வரவேற்றது.
வனவிலங்கு அமைப்பின் நண்பர்கள், பள்ளியின் கல்வியாளர்கள், பயனாளிகள் குழுமங்கள், இந்தப் பூங்காவை உருவாக்க உதவிய வெளிநாட்டு ஊழியர்கள் என இன்னும் அதிகமான சிறப்பு வருகையாளர்கள் மே 8ஆம் தேதிக்குள் அந்த மகிழ்வனத்துக்கு வருகை புரிவார்கள்.
பறவைகளைப் பார்த்தவாறே நடந்துசெல்லும் எட்டுப் பாதைகள். பலமாடி பெங்குவின் காட்சிக்கூடத்தில் நீருக்கடியில் உள்ள பனிக்கட்டி அமைப்புகள், பாறைகள், நீர் செடிகள் இருக்கும். 2,000 பேர் அமரக்கூடிய வெளிப்புற அரங்கு, பூங்காவுக்கு உள்ளேயும் வெளியேயும் பல்வேறு உணவுக் கடைகள், பிள்ளைகளுக்கான விளையாட்டு மைதானம் ஆகியவையும் அங்கு உண்டு.
பறவைகள் மகிழ்வனம் மே 8ஆம் தேதி திறக்கப்படுவதை ஒட்டி, மண்டாய் வனவிலங்கு குழுமம் 'மண்டாய்' எனும் புதிய செயலியை அறிமுகம் செய்யும்.
மே 8 முதல் 26ஆம் தேதி வரை, பெரியவர்களுக்கான கட்டணம் $38, மூன்று முதல் 12 வயது வரையிலான சிறுவர்களுக்கு $23, 60 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களுக்கு $20 என்று கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. 27ஆம் தேதிக்குப் பிறகு பெரியவர்களுக்கு $48, சிறுவர்களுக்கு $33. முதியோரின் கட்டணத்தில் மாற்றம் இல்லை.
இம்மாதம் 24ஆம் தேதி முதல் டிக்கெட் விற்பனை தொடங்கும்.

