சிங்கப்பூரில் செயல்படும் கணினித் தகவல் சேமிப்பு நிலையங்கள், ஹைட்ரஜன் மின்சக்திக்கு மாறுகின்றன. சிங்கப்பூர் வரும் 2050ஆம் ஆண்டுவாக்கில் அறவே கரிமக் கழிவற்ற நிலையைச் சாதிக்க வேண்டும் என்று உறுதி பூண்டுள்ளது.
கணினித் தகவல் சேமிப்பு நிலையங்களின் வளர்ச்சி அதற்குத் தோதாக இருப்பதை உறுதிப்படுத்தும் வகையில், புதிய சுற்றுச்சூழல் நிபந்தனை இடம்பெற்று வருகிறது. இதனை ஒட்டி அந்த நிலையங்கள் ஹைட்ரஜன் மின்சக்திக்கு மாறுகின்றன.
வழக்கமான கணினித் தகவல் சேமிப்பு நிலையங்கள் அதிக அளவு மின்சாரத்தைப் பயன்படுத்துபவை.
இணையப் பாதுகாப்பு, தொலைதூர கணினிப் பயன்பாடுகள், இணைய வர்த்தகம் உள்ளிட்ட நிறுவனங்களின் ஏராளமான தகவல்களை அதிக அளவில் சேமித்து வைக்கவும் செயல்படுத்தவும் அனுப்பவும் அந்த நிலையங்களில் இருக்கும் வன்பொருள்களுக்கு மின்சாரம் அதிக அளவில் தேவைப்படும்.
அதனால் அந்தச் சாதனங்கள் அதிக வெப்பமடையும். வெப்பத்தைக் குறைக்க குளிரூட்டி சாதன வசதி தேவைப்படும். இதற்கும் அதிக மின்சாரம் வேண்டும்.
இதனிடையே பங்காளி நிறுவனங்களுடன் சேர்ந்து மிதக்கும் கணினித் தகவல் தொழிற்பேட்டை ஒன்றை அமைப்பது குறித்து தான் ஆராய்ந்து வருவதாக 'கெப்பல் டேட்டா சென்டர்ஸ்' தன்னிடம் தெரிவித்ததாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் குறிப்பிட்டது.
அந்தப் பேட்டை, 30 ஹெக்டருக்கும் அதிக பரப்பளவில் அமையும். அது 2026ஆம் ஆண்டு முதல் கட்டம்கட்டமாக தயாராகும்.
அந்தப் பேட்டையில் திரவ குழாய் ஹைட்ரஜன் வாயுவைப் பயன்படுத்துவது பற்றி தான் பரிசீலித்து வருவதாகவும் நிறுவனம் தெரிவித்தது. அந்த வாயுவை இந்த வட்டார நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யலாம்.
நீண்டகாலப்போக்கில் பசுமை ஹைட்ரஜனை பயன்படுத்துவது பற்றி நிறுவனம் ஆராயும்.
சிங்கப்பூரில் 2021ஆம் ஆண்டுவாக்கில் 70க்கும் மேற்பட்ட கணினித் தகவல் நிலையங்கள் செயல்பட்டன.
அவை நாட்டின் மொத்த மின்சாரப் பயனீட்டில் சுமார் 7% அளவுக்குப் பொறுப்பாக இருந்தன.
'செராயா பார்ட்னர்ஸ்' என்ற முதலீட்டு நிறுவனத்திற்குச் சொந்தமான 'எம்பிரியோன் டிசி' என்ற நிறுவனம், குறை கரிம ஹைட்ரஜனில் இயங்கும் கணினித் தகவல் நிலையம் ஒன்றை அமைப்பதற்கான யோசனையை அரசாங்கத்திடம் தாக்கல் செய்துள்ளது.
சிங்கப்பூரில் செயல்படும் கணினித் தகவல் நிலையங்களுக்குத் தேவைப்படும் மின்சாரத்தை வழங்கும் வகையில் ஹைட்ரஜன் எரிபொருள் மின்கலன்களைப் பரிசோதித்துப் பார்க்க ஏதுவாக சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்துடன் சேர்ந்து செயல்பட்டுவருவதாக அமெரிக்காவின் மின்னிலக்க உள்கட்டமைப்பு நிறுவனம் 'ஈக்யூனிக்ஸ்' அறிவித்துள்ளது.

