நியமன நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு 30 பரிந்துரைகளே சமர்ப்பிக்கப்பட்டுள்ளன என்று நாடாளுமன்ற அலுவலர் அலுவகம் தெரிவித்துள்ளார்.
முன்னைய பரிந்துரைகளுடன் ஒப்பிடுகையில், 2001ஆம் ஆண்டிலிருந்து இதுதான் ஆகக் குறைவான எண்ணிக்கை என்பது குறிப்பிடத்தக்கது.
இம்முறைக்கான பரிந்துரைகள் இம்மாதம் 19ஆம் தேதி மாலை 4.30 மணிக்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. பரிந்துரை நிலவரம் பற்றி அறிக்கை இம்மாதம் 21ஆம் தேதியன்று வெளியிடப்பட்டது.
இப்போது நாடாளுமன்றத்தில் அதிகமான எதிர்த்தரப்புக் குரல்கள் இருப்பது குறைவான பரிந்துரைகளுக்குக் காரணமாக இருக்கலாம் என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் பேசிய முன்னாள் நியமன நாடாளுமன்ற உறுப்பினர்களும் அரசியல் கவனிப்பாளர்களும் தெரிவித்தனர்.
தற்போது நாடாளுமன்றத்தில் பாட்டாளிக் கட்சியின் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒன்பது உறுப்பினர்களும் சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியின் இரண்டு நியமன உறுப்பினர்களும் உள்ளனர்.
இருப்பினும், நியமன உறுப்பினர்கள் சிங்கப்பூரில் பாரபட்சமற்ற கண்ணோட்டத்தைத் தொடர்ந்து வழங்கலாம் என்று அவர்கள் கருதுகின்றனர்.
நாடாளுமன்றத்தில் பரந்த அளவில் கருத்துப் பிரதிநிதித்துவம் இருக்க வேண்டும் என்பதைக் கருத்தில்கொண்டு நியமன நாடாளுமன்ற உறுப்பினர் திட்டம் 1990ல் அறிமுகப்படுத்தப்பட்டது.
ஒவ்வொருமுறையும் ஒன்பது நியமன உறுப்பினர்கள் வரை தேர்வு செய்யப்படலாம். அவர்களின் பதவிக்காலம் இரண்டரை ஆண்டுகள் நீடிக்கும்.
கடந்த 2020ல் நியமன உறுப்பினர்களுக்கான பரிந்துரை கோரிய நாடாளுமன்ற அறிக்கைக்குப் பிறகு, 14வது நாடாளுமன்றத்தின் முதல் அமர்வுக்கு 61 பரிந்துரைகள் கிடைக்கப்பெற்றன.
அதுதான் இத்திட்டம் அறிமுகமானதில் இருந்து கிடைக்கப்பெற்ற ஆக அதிக எண்ணிக்கை.
13வது நாடாளுமன்றத்தின் முதல் அமர்வுக்கு 41 பரிந்துரைகள் கிடைக்கப்பெற்றன. இரண்டாம் அமர்வுக்கு 48 பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டன.
2001 அக்டோபரில் கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தின் இறுதி அமர்வுக்கு 21 பெயர்கள் சமர்ப்பிக்கப்பட்டன.
அவ்வாண்டு முதல் நியமன உறுப்பினர்களுக்கான பரிந்துரைகள் எண்ணிக்கை ஏறுமுகமாக இருந்தது.
12வது நாடாளுமன்றத்தின் இரண்டாம் அமர்வுக்கான நியமன உறுப்பினர்களுக்கான பரிந்துரைகளில் சரிவு தென்பட்டது.

