பொதுச் சுகாதார நிபுணர் பேராசிரியர் வெர்னன் லீ (இடது படம்), தொற்றுநோய்களுக்கான தேசிய நிலையத்தின் புதிய தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் அந்தப் பொறுப்பை ஜூலை 1ஆம் தேதி முதல் வகிப்பார் என்று தேசிய சுகாதாரப் பராமரிப்புக் குழுமம் நேற்று தெரிவித்தது.
சுகாதார அமைச்சில் தொற்றுநோய் பிரிவின் மூத்த இயக்குநராகப் பணியாற்றும் பேராசிரியர் லீ, தொற்றுநோய்களுக்கான தேசிய நிலையத்தின் தற்போதைய தலைவரான பேராசிரியர் லியோ யீ சின்னிடமிருந்து (வலது படம்) அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொள்வார். அத்துடன் சுகாதார அமைச்சில் அவர் வகிக்கும் பதவியையும் பேராசிரியர் லீ தக்கவைத்துக்கொள்வார்.
கடந்த ஆறு ஆண்டுகளாக தொற்றுநோய்களுக்கான தேசிய நிலையத்தின் தலைவராக உள்ள பேராசிரியர் லியோ, சுகாதார அமைச்சில் மூத்த மருத்துவ ஆலோசகராகவும் தேசிய சுகாதாரப் பராமரிப்புக் குழுமத்தில் மூத்த ஆலோசகராகவும் ஜூலை 1ஆம் தேதி முதல் பெற்றுப்பேற்றுக்கொள்வார்.
"மிகச் சிறந்த பங்களிப்பை சிங்கப்பூரிலும் அனைத்துலக அளவிலும் நல்கிய பேராசிரியர் லியோவுக்கு எங்கள் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். புதிய பொறுப்புக்கு பேராசிரியர் லீயை வரவேற்கிறோம்," என்றார் சுகாதாரப் பராமரிப்புக் குழுமத்தின் தலைமை நிர்வாகி பேராசிரியர் ஃபிலிப் சூ.

