சிங்கப்பூரின் கடல்துறை நிறுவனங்கள், கரிம நீக்கம், மின்னிலக்கமயமாதல் போன்ற அம்சங்களிலும் அவை தொடர்பான இலக்குகளை எட்டுவதற்குரிய திறனாளர்களை மேம்படுத்துவதிலும் தொடர்ந்து கவனம் செலுத்த வேண்டும் என்று போக்குவரத்து அமைச்சர் எஸ். ஈஸ்வரன் வலியுறுத்தியுள்ளார். உடனடிச் சிக்கல்களைக் கையாளும் நிலையிலும் அந்த இலக்குகளில் கவனம் செலுத்த வேண்டும் என்றார் அவர்.
உலகளாவிய பொருளியல் மந்தநிலை, புவிசார் அரசியல் தொடர்பான பிரச்சினைகள் போன்றவை துறைமுகம், கப்பல் போக்குவரத்து, தளவாடத் துறை ஆகியவற்றின் மீள்திறனைச் சோதிக்க வல்லவை என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
சிங்கப்பூர் கடல்துறை வாரம் 2023ன் தொடக்க நிகழ்ச்சியில் நேற்று அவர் உரையாற்றினார்.
உடனடிச் சவால்களைச் சமாளிக்கும்போதே நீண்டகாலக் கடப்பாடுகளை மறந்துவிடக்கூடாது என்று கூறிய அமைச்சர், பாதுகாப்பான, கூடுதல் திறன்மிக்க, நீடித்த நிலைத்தன்மையுடன்கூடிய கடல்துறையை உருவாக்குவது அவசியம் என்றார்.
சிங்கப்பூர் கடல்துறை, துறைமுக ஆணையம் 27வது முறையாக ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சியில் 20,000 பேர் கலந்துகொள்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடல்துறை மிகச் சிக்கலான சூழலைச் சந்தித்துள்ளது என்று அமைச்சர் ஈஸ்வரன் கூறினார். கொவிட்-19 தொடர்பான பின்னடைவிலிருந்து உலகம் மீளத் தொடங்கினாலும் உக்ரேனியப் போரால் விநியோகச் சங்கிலியும் கப்பல் போக்குவரத்தும் மிகவும் பாதிக்கப்பட்டிருப்பதை அவர் சுட்டினார்.
அனைத்துலகப் பண நிதியம் இவ்வாண்டுக்கான உலகப் பொருளியல் வளர்ச்சி 2.8 விழுக்காடாகக் குறையும் என்று முன்னுரைத்துள்ளதை அமைச்சர் சுட்டினார்.
கடல்துறைக்குத் திறனாளர்களை ஈர்க்க, கடல்துறை மனிதவளக் கருத்தரங்கில் இவ்வாண்டு இளையர் பிரிவு அறிமுகம் காண்கிறது.
சிங்கப்பூருக்கும் சீனாவுக்கும் இடையில் கடல்துறைத் திறனாளர்கள், நிபுணத்துவப் பரிமாற்றத்துக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதாக அவர் கூறினார். சிங்கப்பூர் கடல்துறை, துறைமுக ஆணையமும் சீ ஷங்காய் கடல்துறைப் பல்கலைக்கழகமும் அதில் கையெழுத்திட்டு உள்ளன.

