டனர்ன் சாலையில் டான் கா கீ ரயில் நிலையத்திற்கு அருகே, நேற்று முன்தினம் நடந்து சென்றவரை கார் மோதியதில் 64 வயது ஆடவர் உயிரிழந்தார்.
டனர்ன் சாலை-வாட்டன் எஸ்டேட் சாலைச் சந்திப்பிற்கு அருகே நடந்த விபத்து குறித்து நேற்று முன்தினம் பிற்பகல் இரண்டு மணிக்குத் தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.
சம்பவ இடத்திலேயே ஆடவர் மாண்டதாக மருத்துவ உதவியாளர்கள் தெரிவித்தனர்.
காரை ஓட்டிய 44 வயது ஆடவர் டான் டோக் செங் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். நேற்று அவர் கைது செய்யப்பட்டதாகக் காவல்துறை தெரிவித்தது.
காரில் பயணம் செய்த நான்கு வயதுச் சிறுவனும் மூன்று வயதுச் சிறுமியும் கேகே மகளிர், சிறார் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர்.
விபத்தையடுத்து நேற்று முன் தினம் பிற்பகல் 3.30 மணியளவில் அங்கு பெரிய அளவிலான வாகன நெரிசலைக் காண முடிந்ததாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கூறியது.
விசாரணை தொடர்கிறது.

