வெளிநாடுகளைச் சேர்ந்த 3,500 பணக்காரர்கள் இவ்வாண்டு சிங்கப்பூர் குடியுரிமை பெறவிருப்பதாக வெளியான செய்திகள் தவறாக வழிநடத்துவதாக உள்ளன என்று உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
அவர்கள் பெரும்பாலும் சீனாவைச் சேர்ந்தவர்கள் என்று சீனமொழி நாளிதழான சாவ் பாவ் கடந்த வியாழக்கிழமை செய்தி வெளியிட்டு இருந்தது. 'நியூ வோர்ல்டு வெல்த்' எனும் சொத்து நுண்ணறிவு நிறுவனத்தின் ஆய்வுப் பிரிவுத் தலைவர் ஆண்ட்ரூ எமோயல்ஸ் என்பவரைச் சுட்டி, அச்செய்தி வெளியிடப்பட்டிருந்தது. அதற்கு மறுநாள் `பிஸ்னஸ் டைம்ஸ்' நாளிதழிலும் அதுகுறித்த செய்தி வெளியாகி இருந்தது.
அப்பணக்காரர்கள் ஒவ்வொருவரும் முதலீட்டுச் சொத்தாக குறைந்தது ஆறு மில்லியன் அமெரிக்க டாலரை (S$8.02) கொண்டிருப்பதாக அச்செய்திகள் குறிப்பிட்டிருந்தன.
இந்நிலையில், தென்னாப்பிரிக்காவின் ஜோகனஸ்பர்க் நகரைச் சேர்ந்த ஒரு தனியார் ஆய்வு நிறுவனத்தில் பணிபுரியும் ஒருவர் மூலமாக மேற்குறிப்பிட்ட எண்கள் பெறப்பட்டதாக உள்துறை அமைச்சு நேற்று தெரிவித்தது.
"எந்த அடிப்படையில் அவரோ அவரது நிறுவனமோ இப்படி 3,500 பணக்காரர்களுக்கு சிங்கப்பூர் குடியுரிமை வழங்கப்படவுள்ளதாக முடிவிற்கு வந்தார் என்று தெரியவில்லை. சிங்கப்பூர் குடியுரிமைக்காக இவ்வாண்டில் இன்னும் எத்தனை விண்ணப்பங்கள் பெறப்படும் என்பதே இன்னும் முடிவுசெய்யப்படவில்லை," என்று அமைச்சு விளக்கமளித்துள்ளது.
"நம்பத்தகுந்த எந்த அடிப்படையுமின்றி வெளியாகியுள்ள இந்தத் தகவல் மிகவும் தவறாக வழிநடத்துவதாக உள்ளது. பணக்காரராக இருந்தால் குடியுரிமை கிடைத்துவிடும் என்பதற்கு உத்தரவாதமில்லை," என்று அமைச்சு குறிப்பிட்டது.
இவ்வாண்டில் சிங்கப்பூர் குடியுரிமை பெறவிருக்கும் பணக்காரர்களில் ஹாங்காங், இந்தியா, இந்தோனீசியா, மலேசியா, வியட்னாம், பிலிப்பீன்ஸ், பிரிட்டன் ஆகிய நாட்டைச் சேர்ந்தவர்களும் அடங்குவர் என்று திரு எமோயல்ஸ் கூறியிருந்தார்.
சிங்கப்பூருக்குக் கிடைக்கும் பலன்கள், இங்கு ஏற்படுத்தியுள்ள தொழில், பணிபுரியும் சிங்கப்பூரர்களின் எண்ணிக்கை உள்ளிட்ட பல காரணிகள் சிங்கப்பூர் குடியுரிமைக்குக் கருத்தில் கொள்ளப்படும் என்று அமைச்சு குறிப்பிட்டது.
அத்துடன், சமூகத்துடன் ஒருங்கிணைவதில் ஒருவரின் தனித்திறனும் சிங்கப்பூரில் வேர்விட அவர் கொண்டுள்ள கடப்பாடும் கருத்தில்கொள்ளப்படும் என்றும் அது கூறியது.

