கூடுதல் முத்திரை வரியைத் தவிர்ப்பதற்காக '99-to-1' என்ற முறையை அல்லது அதுபோன்ற ஏற்பாடுகளை பயன்படுத்தும் தனியார் சொத்து வாங்குபவர்கள் குறித்து தகவல் அளித்தால் 100,000 வெள்ளி வரை வெகுமதி அளிக்கப்படும் என்று சிங்கப்பூர் உள்நாட்டு வருவாய் ஆணையம் அறிவித்துள்ளது.
ஒவ்வொரு சம்பவத்திலும் மீட்கப்பட்ட தொகையில் 15 விழுக்காடு வெகுமதி அளிக்கப்படும். இது, அதிகபட்சமாக 100,000 வெள்ளி வரை இருக்கும். வரியை மீட்பதற்கான தகவல் அல்லது ஆவணங்களை அளித்தால் இந்த வெகுமதி வழங்கப்படும் என்று வரி வசூல் செய்யும் அமைப்பு குறிப்பிட்டது.
வரி ஏய்ப்பு குறித்த தகவல் களுக்கு ஆணையம் வெகுமதி வழங்குவது இது முதல் முறைஅல்ல.
2018க்கும் 2021க்கும் இடையே '99-to-1' என்ற முறை அல்லது அதுபோன்ற ஏற்பாடுகள் மூலம் 0.5 விழுக்காடு தனியார் சொத்து பரிவர்த்தனைகள் நடந்துள்ளன.
இந்தக் குறுக்கு வழியில் வீட்டை முழுமையாக விற்காமல் ஒரு விழுக்காடு வீட்டை மட்டும் குறுகிய காலத்துக்கு வாங்குபவர் களுக்கு விற்கப்படுகிறது.
இதனால் வீட்டை விற்பவரும் வாங்குபவரும் இணை உரிமையாளர்களாகவும் சொத்தை வாங்குவதற்கான வங்கிக் கடனுக்கு இணை விண்ணப்பதாரர் களாகவும் உள்ளனர்.
இதன் மூலம் ஏற்கெனவே தனியார் சொத்து வைத்திருப்பவர்கள் கூடுதல் முத்திரை வரி செலுத்துவதைத் தவிர்க்க வழி ஏற்படுகிறது. கடந்த வெள்ளிக்கிழமை இது போன்ற ஏற்பாடுகள் குறித்து சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் சில கேள்விகள் எழுப்பியபோது நிதி மற்றும் போக்கு வரத்து மூத்த துணை அமைச்சர் சீ ஹொங் டாட் பதிலளித்திருந்தார்.
இது குறித்து நாடாளுமன்றத்தில் பேசிய அமைச்சர் சீ ஹொங் டாட், இத்தகைய ஏற்பாடுகள் சிறிய எண்ணிக்கையில் நடந்துள்ளன என்றார்.
ஆனால் அண்மைய ஆண்டுகளில் ஒட்டுமொத்த குடியிருப்பு பரிவர்த்தனைகளில் இதன் விகிதம் அதிகரித்து வந்துள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.
சொத்தை வாங்க முடிவு செய்த குறுகிய காலத்தில் ஏன் ஒரு விழுக்காடு வீட்டை மட்டும் வாங்கியுள்ளீர்கள் என்பதை விளக்க வேண்டும் என்று கூறி முதல் முறையாக சொத்து வாங்கிய சிலருக்கு ஆணையம் ஏப்ரல் முற்பகுதியில் கடிதம் அனுப்பி யிருந்ததாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தகவல் வெளியிட்டிருந்தது.
தற்போது தணிக்கை நடந்து வருவதால் இதுபோன்ற பரிவர்த்தனைகளின் தகவல்களை வெளியிட இயலாது என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கேட்டதற்கு ஆணையம் கூறியது.
2018-2021 காலகட்டத்தில் எக்சிகியூட்டிவ் கொண்டோமினிய வீடுகள் நீங்கலாக 95,755 தனியார் வீடுகளுக்கான பரிவர்த் தனைகள் நடைபெற்றன என்று 'ஆரஞ்ச் டீ அண்ட் டை' நிறு வனத்தின் பகுப்பாய்வு, ஆய்வுப் பிரிவின் மூத்த உதவி தலைவர் கிறிஸ்டின் சன் தெரிவித்தார்.
இதன்படி பார்த்தால் 99-to-1 என்ற முறையின்கீழ் 0.5 விழுக்காடு வீடுகள், அதாவது 479 தனியார் வீடுகள் விற்கப்பட்டிருக்கலாம் என்றார் அவர்.

