மின் வர்த்தகத்தில் தவறான இடத்தில் பொருள் விநியோகம், பழுதடைந்த பொருள்கள் என புகார்கள் அதிகரித்து வரும் சூழலில் ஷாப்பீ என்ற மின்வர்த்தகத் தளம், இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க தனது சேவையின் தரத்தை உயர்த்த உறுதி பூண்டுள்ளது.
இதற்காக 'கேஸ்' என்று அழைக்கப்படும் சிங்கப்பூர் பயனீட்டாளர் சங்கத்துடன் சிங்கப்பூர் ஷாப்பீ ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
இதன்படி வாடிக்கையாளர் களின் திருப்தியை உறுதி செய்யும் வகையில் சச்சரவுகளுக்குத் தீர்வுகாண புதிய முறை கடைப் பிடிக்கப்படும்.
வாடிக்கையாளர் கோரிக்கை விடுத்த இரண்டரை நாளில் தீவு முழுவதும் உள்ள நிலையங்கள் மற்றும் இதர வழிகளில் பணத்தை திருப்பித்தர ஷாப்பீ கடப்பாடு கொண்டுள்ளது.
இது, லசாடா பரிந்துரைத்துள்ள மூன்று வேலை நாள் களுக்கு இணையாக உள்ளது. மேலும் 'கேஸ்' பரிந்துரைத்த ஏழு வேலை நாள்களைவிட குறைவு. அது மட்டுமல்லாமல் அமேசான் தனது இணையத்தளத்தில் பரிந்துரை செய்துள்ள 45 நாள்களைவிட இது குறைவு.
'ஷாப்பீயுடன் பாதுகாப்பாக பொருள்களை வாங்குங்கள்' என்ற வாடிக்கையாளர் பாதுகாப்புத் திட்டத்தை நேற்று தொடங்கி வைத்த ஷாப்பீ, புதிய மாற்றங்களை அறிவித்தது.
விற்பனையாளர் மீதான நம்பகத்தன்மையை மேம்படுத்துவது மாற்றங்களில் ஒன்று.
'கேஸ்' தலைவர் மெல்வின் யோங், இணையம் வழியாகப் பொருள்களை வாங்குவது நமது வாழ்க்கையில் இன்றிமையாத அம்சமாக மாறிவிட்டது என்றார்.
மின்வர்த்தகத்தில் 2021ல் 2,206ஆக இருந்த வாடிக்கையாளர் புகார்கள், 2022ல் 2,530க்கு அதிகரித்துள்ளதை அவர் சுட்டிக் காட்டினார்.

